'கொரோனாவை விட கொடியது': 'நோய் X' பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
அடுத்த தொற்றுநோய் 50 மில்லியன் உயிர்களை எடுக்கக்கூடும் என்று இங்கிலாந்தின் தடுப்பூசி பணிக்குழு தலைவர் டேம் கேட் பிங்காம் கூறியுள்ளார். 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து உலகளவில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அடுத்த தொற்றுநோய் 50 மில்லியன் உயிர்களை எடுக்கக்கூடும் என்று ஒரு வல்லுநர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக சுகாதார அமைப்பு(WHO) இந்த புதிய தொற்றுநோய்க்கு 'நோய் X' என்று பெயரிட்டுள்ளது. COVID-19 தொற்றுநோய் பரவ ஆரம்பித்ததற்கு ஒரு வருடத்திற்கு முன்பு, 2018ஆம் ஆண்டில் WHO முதன்முதலில் "நோய் X" என்ற வார்த்தையை பயன்படுத்தியது. உலகை ஆட்டிப்படைக்க போகும் அடுத்த தொற்றுநோய்க்கு 'நோய் X' என்று பெயரிடபட்டுள்ளது.
'நோய் X' எப்படி பரவும்?
இந்த தொற்றுநோய் எபோலா, SARS மற்றும் ஜிகா உள்ளிட்ட அதி பயங்கரமான நோய்களாக கூட இருக்கலாம். எனவே தான், எபோலா, SARS மற்றும் ஜிகா உள்ளிட்ட நோய்களின் பரவலை உலக சுகாதார அமைப்பு தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதுவரை மனிதர்களுக்கு பரவாத ஒரு நோய்கிருமியால் கூட இந்த 'நோய் X' என்னும் சர்வதேச தொற்றுநோய் ஏற்படலாம் என்று உலக சுகாதார அமைப்பின் இணையதளம் கூறுகிறது. இந்த நோய்க்கிருமி முற்றிலும் புதுமையான வைரஸ், பாக்டீரியா அல்லது பூஞ்சையாக கூட இருக்கலாம். இது ஜூனோடிக் நோயுடன் தொடர்புடையதாகவோ அல்லது ஒரு ஆர்என்ஏ வைரஸாகவோ இருக்கலாம் என்கிறது உலக சுகாதார அமைப்பு. மனிதர்களுக்கு பரவுவதற்கு முன், மிருங்களுக்கு இது முதலில் பரவக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.