Page Loader
சந்திர புத்தாண்டு விழாவில் மக்களை சரமாரியாக சுட்டவர் தற்கொலை
சந்தேக நபர் போலீஸார் சுற்றிவளைத்ததால் தன்னை தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது.

சந்திர புத்தாண்டு விழாவில் மக்களை சரமாரியாக சுட்டவர் தற்கொலை

எழுதியவர் Sindhuja SM
Jan 23, 2023
11:48 am

செய்தி முன்னோட்டம்

கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி பூங்காவில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்பட்ட நபர் உயிரிழந்தார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மான்டேரி பார்க் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 10 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் துறையின் கேப்டன் ஆண்ட்ரூ மேயர் நேற்று(ஜன:22) தெரிவித்திருந்தார். சனிக்கிழமை இரவு 10 மணியளவில் உள்ளூர் நடன ஸ்டுடியோவில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. ஒவ்வொரு ஆண்டும் மான்டேரி பார்க் சந்திர புத்தாண்டு விழா நடைபெறும் டவுன்டவுன் பகுதிக்கு அருகில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த மிகப்பெரிய நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

அமெரிக்கா

தற்கொலை செய்துகொண்ட குற்றவாளி

திடீரென்று அந்த இடத்துக்குள் புகுந்த மர்ம நபர் புத்தாண்டு விழாவில் கலந்து கொண்ட மக்களை சரமாரியாக சுட ஆரம்பித்தார். இதில் 10 பேர் உயிரிழந்தனர். சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகி இருப்பதாக நேற்று கூறப்பட்டது. இவரை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், போலீஸார் தேடிவந்த ஹூ கேன் டிரான்(72) என்ற நபர், டோரன்ஸ் நகரில் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்ட பின்னர் வெள்ளை வேனில் இறந்து கிடந்தார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அவரது உடலில் தன்னைதானே சுட்டு கொண்ட காயம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த 10 பேருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் அமெரிக்க தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடும்படி அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டிருக்கிறார்.