சிறுவர்களை பாதுகாக்க கடுமையான விதிகள் தேவை! சோஷியல் மீடியாவிற்கு எதிராகத் திரண்ட அமெரிக்கர்கள்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவில் இயங்கி வரும் முன்னணி சமூக வலைதள நிறுவனங்கள் மீது கடுமையான அரசுக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என அந்நாட்டு மக்களிடையே நடத்தப்பட்ட புதிய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. ராய்ட்டர்ஸ் மற்றும் இப்சாஸ் இணைந்து நடத்திய இந்த தேசிய அளவிலானக் கருத்துக் கணிப்பில், 61 சதவீதத்திற்கும் அதிகமான அமெரிக்கர்கள் சமூக வலைதள நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க உறுதியான அரசாங்க மேற்பார்வை மற்றும் கட்டுப்பாடுகள் தேவை என ஆதரவு தெரிவித்துள்ளனர். கூடுதல் விபரங்கள் இங்கே:-
வயது சரிபார்ப்பு
சிறுவர்களைப் பாதுகாக்கக் கட்டாயமாகும் வயது சரிபார்ப்பு
சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினர் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த கடுமையான வயது சரிபார்ப்பு நடைமுறைகளைக் கொண்டு வர வேண்டும் என 66 சதவீத அமெரிக்கர்கள் வாக்களித்துள்ளனர்.
குறிப்பாக 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனுமதி இன்றி சமூக வலைதளக் கணக்குகளைத் தொடங்குவதைத் தடுக்க வேண்டும் என்பதில் ஆளும் ஜனநாயகக் கட்சி (69%) மற்றும் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி (74%) ஆகிய இரண்டின் ஆதரவாளர்களும் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளனர்.
சட்டப் போராட்டங்கள்
மெட்டா மற்றும் யூடியூப் நிறுவனங்கள் மீதான சட்டப் போராட்டங்கள்
சிறுவர்களின் மனநலனைப் பாதிக்கும் வகையிலும், அவர்களை செயலிகளுக்கு அடிமையாக்கும் வகையிலும் கருவிகளை வடிவமைத்ததாக மெட்டா மற்றும் கூகுளின் யூடியூப் நிறுவனங்கள் மீது பல்வேறு அமெரிக்க மாநில அரசுகள் வழக்கு தொடர்ந்துள்ளன.
சமீபத்தில் நியூ மெக்ஸிகோ நீதிமன்றம் மெட்டா நிறுவனத்திற்கு 567 மில்லியன் டாலர் அபராதம் விதித்தது.
எனினும், வயது சரிபார்ப்பு விதிகள் பேச்சு சுதந்திரத்திற்கு எதிரானது என டெக் நிறுவனங்களின் கூட்டமைப்பு நீதிமன்றத்தில் வாதிட்டு வருகிறது.
கருத்து மாறுபாடு
மனநலப் பாதிப்பும் பயனர்களின் மாறுபட்ட கருத்துகளும்
கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 85 சதவீதப் பொதுமக்கள், சமூக வலைதளங்கள் குழந்தைகளுக்கு அடிமையாக்கும் தன்மையைக் கொண்டிருப்பதாகவும், அவர்களின் மனநலனுக்குப் பெரும் தீங்கை விளைவிப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.
அதே வேளையில், தங்களின் சுய பயன்பாட்டிற்கு சமூக வலைதளங்கள் மகிழ்ச்சி தருவதாகக் கூறும் மக்கள், நாளுக்கு நாள் செயலிகளில் செலவிடும் நேரத்தைக் குறைக்க முடியாமல் சிரமப்படுவதாகவும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதன்காரணமாகவே அரசுக் கட்டுப்பாடுகள் அவசியமாவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.