ஆப்கானிஸ்தானில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: 14 பேர் பலி, 78 பேர் காயம்
மேற்கு ஆப்கானிஸ்தானை இன்று 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதால் 14 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 78 பேர் காயமடைந்தனர். இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கு அடியில் மக்கள் சிக்கி இருக்க வாய்ப்பிருப்பதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த நிலநடுக்கம் ஹெராட் நகரத்தில் இருந்து வடமேற்கே 40 கிலோமீட்டர் (25 மைல்) தொலைவில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து 5.5, 4.7, 6.3, 5.9 மற்றும் 4.6 ரிக்டர் அளவுகளில் ஐந்து நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் உயரக்கூடும்
நிலநடுக்கங்கள் தொடங்கியவுடன் 11:00 மணியளவில்(0630 GMT) நகரத்தில் உள்ள கட்டிடங்களில் இருந்து திரளான குடியிருப்பாளர்கள் மற்றும் கடைக்காரர்கள் வெளியேறினர். இதனால், 25 பேர் காயம் அடைந்தனர் மற்றும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டது என்று தாலிபான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகளால், ஹெராட்டின் பரந்த தெருக்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கூட்டம் கூட்டமாக வெளியே வந்து நின்றனர். இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் உயரக்கூடும் என்று முதற்கட்ட அறிக்கையில் அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.