100 ஆண்டுகளுக்கு பின் பெறுநர் முகவரிக்கு வந்தடைந்த கடிதம்
ஒரு கடிதம், 100 ஆண்டுகளுக்கு பின், தெற்கு லண்டனில் உள்ள அதன் பெறுநர் முகவரியை அடைந்துள்ளது. ஐந்தாம் ஜார்ஜ் அரசர் என்று முத்திரை குத்தப்பட்ட ஒரு கடிதம் 2021ஆம் ஆண்டு தியேட்டர் இயக்குனர் ஃபின்லே க்ளெனின் 'கிரிஸ்டல் பேலஸிற்கு' வந்ததாக பிபிசி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்டாம்ப் மோசடி வழக்குகளில் சாட்சிக்காக அடிக்கடி அழைக்கப்படும் ஸ்டாம்ப் விற்பனையாளரான ஓஸ்வால்ட் மார்ஷின் மனைவி, கேட்டி மார்ஷுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது. கிறிஸ்டெபெல் மெனெல் என்பவர் அனுப்பிய இந்த கடிதம், கடந்த வருடம் காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணி பிறப்பதற்கு முன் எழுதப்பட்டதாகும். இதில் நலம் விசாரிப்பு போன்ற விவரங்கள் எழுதப்பட்டிருக்கிறது.
இரண்டாம் எலிசபத் மகாராணி பிறப்பதற்கு முன் எழுதப்பட்ட கடிதம்
மென்னல் என்பவர் பணக்கார தேயிலை வியாபாரியான ஹென்றி டுக் மென்னலின் மகள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கடிதம் சிடன்ஹாம் வரிசையாக்க அலுவலகம் என்ற தபால் அலுவலகத்தில் எப்படியோ தொலைந்திருக்க வேண்டும் அதனால் தான் இது இத்தனை வருடங்களாக பெறுநர் முகவரியை அடையவில்லை என்று செய்திகள் கூறுகின்றன. சிடன்ஹாம் அலுவலகத்தை தற்போது பல வருடங்களுக்கு பின் புதுப்பித்து கொண்டிருக்கிறார்களாம். அதனால் புதுப்பிக்க மேசைகள், அலமாரிகள் போன்ற பொருட்களை நகர்த்தி இருப்பார்கள் அப்போது இந்த கடிதம் கிடைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதை கண்டுபிடித்தவர்கள் இதை பெறுநர் முகவரிக்கு அனுப்பி வைத்திருக்க கூடும் என்ற அனுமானத்தை செய்திகள் முன் வைக்கின்றன. மேலும், இந்த கடிதம் எழுதப்பட்டது முதலாம் உலக போர் நடந்த காலகட்டம் என்று CNN கூறியுள்ளது.