IND vs WI 2வது டெஸ்ட் : தடுமாறிய இந்தியாவை தூக்கி நிறுத்திய விராட் கோலி
தனது 500வது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் (ஜூலை 20) 87 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இந்திய அணி முதல் இன்னிங்சில் முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்களுடன் உள்ளது. முன்னதாக, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் தொடக்க ஜோடியாக களமிறங்கிய கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் விக்கெட்டுக்கு 139 ரன்கள் சேர்த்தனர். யஷஸ்வி 57 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகி வெளியேற, ரோஹித் 80 ரன்களில் வெளியேறினார்.
44 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி
முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் நன்றாக அமைந்தாலும், 139 ரன்களில் தனது முதல் விக்கெட்டை இழந்த இந்திய கிரிக்கெட் அணி, பின்னர் மளமளவென விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்து 182 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஷுப்மன் கில் மற்றும் அஜிங்க்யா ரஹானே சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். அடுத்தடுத்து 44 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிய நிலையில், விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டனர். கோலி 87 ரன்களுடன் சதத்தை நெருங்கியுள்ள நிலையில், ரவீந்திர ஜடேஜா 36 ரன்களுடன் களத்தில் உள்ளார். தனது 500வது போட்டியில் கோலி சதமடிப்பாரா என்ற எதிர்பார்ப்புடன் இரண்டாம் நாள் ஆட்டத்திற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.