நவீன்-உல்-ஹக்கை ட்ரோல் செய்த ரசிகர்கள்; தடுத்து நிறுத்திய விராட் கோலி; வைரலாகும் காணொளி
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த ஐபிஎல் 2023 சீசனில் தொடங்கிய ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நவீன்-உல்-ஹக்குடனான சண்டையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி முடிவுக்கு கொண்டுவந்தார். புதன்கிழமை (அக்டோபர் 11) டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ ஸ்டேடியத்தில் நடந்த ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானை இந்தியா எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்ற பிறகு நவீன்-உல்-ஹக்கை விராட் கோலி கட்டிப்பிடித்தார். முன்னதாக, லக்னோவில் நடந்த ஐபிஎல் 2023 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மோதல் ஏற்பட்டு, அதில் கவுதம் காம்பிரும் தலையிட பெரும் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் சண்டைக்கு பிறகு நவீன்-உல்-ஹக்கை தொடர்ந்து ட்ரோல் செய்த ரசிகர்கள்
விராட் கோலிக்கு இந்தியாவில் மிகப்பெரிய கிரிக்கெட் ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில், ஐபிஎல் மோதலுக்கு பிறகு நவீன்-உல்-ஹக் இந்தியாவில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும், அவர் மைதானத்தில் இருக்கும்போது, "கோலி, கோலி" என கோஷமிட்டு ட்ரோல் செய்து வந்தனர். தற்போது ஒருநாள் உலகக்கோப்பையில், இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய போட்டியிலும் இது தொடர்ந்த நிலையில், மைதானத்தில் பேட்டிங் செய்த கோலி ரசிகர்களை அவ்வாறு கோஷமிட வேண்டாம் என சைகை மூலம் அறிவுறுத்தினார். விராட் கோலியின் இந்த செயல் காணொளியாக சமூக ஊடகங்களில் வைரலாக பரவ, அவரது பெருந்தன்மையை பலரும் பாராட்டி வருகின்றனர்.