செஸ் ஒலிம்பியாட் 2024: வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் வீராங்கனைகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்தியா தொடர்ந்து உயர்ந்து பிரகாசிக்கிறது! சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியின் குறிப்பிடத்தக்க ஹோஸ்டிங் முதல் புடாபெஸ்டில் நடைபெற்ற 45வது செஸ் ஒலிம்பியாடில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் தங்கம் வெல்வது வரை, என்ன ஒரு பயணம்! நமது செஸ் சாம்பியன்களின் அயராத அர்ப்பணிப்பு, எல்லைகளைத் தாண்டி, உலக அரங்கில் தேசத்திற்குப் பெருமை சேர்த்ததைக் காண்பது மனதிற்கு இதமாக இருக்கிறது. இந்த வரலாற்று சாதனைக்கு இந்திய அணிக்கு வாழ்த்துகள்!" எனத் தெரிவித்துள்ளார்.
அனைத்து பிரிவுகளிலும் தங்கம் வென்றது இந்தியா
இதற்கு முன்னர் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் எதிலும் இந்திய அணி தங்கம் வென்றதில்லை. மேலும், 2014 மற்றும் 2022 என இரண்டு முறை வெண்கலம் மட்டும் வென்றிருந்தது. இந்நிலையில், நடப்பு சீசனில் இந்திய ஆடவர் அணி இறுதிச் சுற்றில் ஸ்லோவேனியாவை வீழ்த்தி செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதல் தங்கத்தை கைப்பற்றியது. அதேபோல் மகளிர் பிரிவில் இந்திய அணி அஜர்பைஜானுக்கு எதிராக வெற்றி பெற்று வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டாவது பதக்கத்தை வென்று சாதனை படைத்தது. இதற்கிடையே, தனிநபர் பிரிவுகளில் டி.குகேஷ், அர்ஜுன் ஈகைசி, திவ்யா தேஷ்முக் ஆகியோர் தங்கம் வென்று அசத்தினர்.