Sports RoundUp: உலகின் நெ.1 வீரரை தோற்கடித்த தமிழக செஸ் வீரர் கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி; மேலும் பல முக்கிய செய்திகள்
வியாழக்கிழமை (அக்.19) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி, முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டான்சித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் ஆகிய இருவரும் அரை சதமடித்தனர். இதையடுத்து பேட்டிங் செய்த இந்தியா விராட் கோலியின் சதம் மற்றும் ஷுப்மன் கில்லின் அரைசதம் மூலம் எளிதாக இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், இந்தியா தற்போதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் இரண்டாவது முறையாக பார்முலா ஈ கார் பந்தயம் நடத்தப்படும் என அறிவிப்பு
ஹைதராபாத்தில் மீண்டும் ஈ-பிரிக்ஸ் பார்முலா ஈ கார் பந்தயம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அறிவிக்கப்பட்டது. இந்த பந்தயத்தின் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற நிலை இருந்த நிலையில், அது தற்போது முடிவுக்கு வந்துள்ளதால், ஃபெடரேஷன் இன்டர்நேஷனல் டி எல் ஆட்டோமொபைல் (எஃப்ஐஏ) மற்றும் பார்முலா ஈ ஆகியவை ஹைதராபாத்தில் 16 சுற்றுகளைக் கொண்ட ஃபார்முலா ஈ பத்தாவது சீசனை நடத்துவதை உறுதி செய்தன. இதன்படி, இந்தியாவில் இரண்டாவது முறையாக பார்முலா ஈ கார் பந்தயம் நடைபெற உள்ளது. இது பிப்ரவரி 10, 2024 அன்று நடைபெறும்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு பின்னடைவு; ஹர்திக் பாண்டியாவுக்கு காயம்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் வியாழக்கிழமை நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டு பாதியிலேயே வெளியேறினார். போட்டியின் முதல் இன்னிங்சில் வங்கதேசம் பேட்டிங் செய்த நிலையில், 9வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசியபோது பந்தை காலில் வைத்து தடுக்க முயன்று காயமடைந்தார். இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்க்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஸ்கேன் முடிவுகளின் அடிப்படையில் அவர் அணியில் நீடிப்பது குறித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.
உலகின் நம்பர் 1 வீரரை தோற்கடித்த தமிழக செஸ் வீரர்
கத்தாரில் கிளாசிக்கல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் ஏழாவது சுற்றில் தமிழகத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் முரளி உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டு வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் கார்ல்சனை வீழ்த்திய மூன்றாவது இந்திய செஸ் வீரர் என்ற பெருமையை கார்த்திகேயன் முரளி பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக ஹரிகிருஷ்ணா மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் ஆகிய இரு இந்தியர்கள் மட்டுமே மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டு வீழ்த்தி இருந்தனர். இதற்கிடையே, கார்த்திகேயனின் இந்த வெற்றியானது இந்தியாவின் எஸ்எல் நாராயண் மற்றும் அர்ஜுன் எரிகைசியுடன் இணைந்து, ஜாவோகிர் சிந்தாரோவ், டேவிட் பாரவியன் மற்றும் நோடிர்பெக் யாகுபோவ் ஆகியோருக்கு இணையாக 7க்கு 5.5 மதிப்பெண்களுடன் அவரது கூட்டு முன்னணியைப் பெற உதவியது.
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி
சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 26,000 ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துளளார். வியாழக்கிழமை நடந்த வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் சதமடித்து தனது 48வது ஒருநாள் கிரிக்கெட் சதத்தை பதிவு செய்தார். மேலும், இந்த போட்டியில் தனது 77வது ரன் எடுத்தபோது சர்வதேச கிரிக்கெட்டில் 26,000 ரன்கள் எனும் மைல்கல்லை எட்டினார். அவர் 567வது இன்னிங்சில் இந்த இலக்கை எட்டி, இதற்கு முன்னர் 600வது இன்னிங்சில் 26,000 ரன்களை எடுத்திருந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். மேலும், சச்சின், ரிக்கி பாண்டிங் மற்றும் குமார் சங்கக்கார வரிசையில் 26,000+ ரன்கள் எடுத்த நான்காவது வீரர் ஆனார்.