Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லாமிச்சானே பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என வெள்ளிக்கிழமை (டிசம்பர் 29) தீர்ப்பளிக்கப்பட்டது. 23 வயதான லாமிச்சானே, ஒரு காலத்தில் நேபாளத்தில் கிரிக்கெட்டின் எழுச்சிக்கான அடையாளமாக இருந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு அவர் காத்மாண்டு ஹோட்டலில் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். ஆனால் ஜனவரி மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அணிக்கு திரும்பினார். இந்நிலையில், தற்போது இந்த வழக்கு விசாரணை முடிந்து லாமிச்சானே குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. அவரது தண்டனை குறித்த விவரங்கள் அடுத்த விசாரணையில் முடிவு செய்யப்படும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நியூசிலாந்து vs வங்கதேசம் இரண்டாவது டி20 போட்டி மழையால் ரத்து
நியூசிலாந்து மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி வெள்ளிக்கிழமை மழையால் ரத்து செய்யப்பட்டது. முன்னதாக, டாஸ் வென்ற வங்கதேச கிரிக்கெட் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், நியூசிலாந்து பேட்டிங் செய்ய களமிறங்கியது. நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில். 11 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் வங்கதேசம் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையேயான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக, போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 318 ரன்கள் எடுத்த நிலையில், பாகிஸ்தான் 264 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில், ஆஸ்திரேலியா 262 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், பாகிஸ்தான் 237 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் 10 விக்கெட் எடுத்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
ரவீந்திர ஜடேஜா விளையாடுவது உறுதி; ஆவேஷ் கான் அணியில் சேர்ப்பு
ஜனவரி 3ஆம் தேதி தொடங்கும் இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, முதல் போட்டியின் நாள் காலையில் மேல் முதுகில் பிடிப்பு ஏற்பட்டதால், ரவீந்திர ஜடேஜா பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், ஜடேஜாவின் உடல்நிலை தற்போது தேறி வருவதால், இரண்டாவது போட்டியில் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், கணுக்கால் காயத்தில் இருந்து மீள முடியாமல், கடைசி நேரத்தில் அணியில் இருந்து வெளியேறிய முகமது ஷமிக்கு பதிலாக, ஆவேஷ் கான், டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டிக்கான பரிசுத் தொகை அதிகரிப்பு
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் பூங்காவில் வரும் ஜனவரி 14 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், போட்டிக்கான பரிசுத்தொகையை 10 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், போட்டியின் மொத்தப் பரிசுத்தொகையாக 86.5 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் வழங்கப்படும் என்று போட்டி இயக்குநர் கிரேக் டைலே வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்தார். முன்னதாக, கடந்த ஆகஸ்டில் யுஎஸ் ஓபன் அதன் மொத்த பரிசுத் தொகை மற்றும் வீரர்களின் இழப்பீட்டுத் தொகையை 65 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், உலக அளவில் நடக்கும் நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக அதிக பரிசுத் தொகை கொண்டதாக யுஎஸ் ஓபன் உள்ளது.