Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
விஜய் ஹசாரே கோப்பையில் புதன்கிழமை (டிச.13) நடைபெற்ற அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு கிரிக்கெட் அணி ஹரியானாவிடம் தோல்வியைத் தழுவியது. முன்னதாக, ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹரியானா முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் எடுத்தது. ஹிமான்ஷு ராணா கடைசி வரை அவுட்டாகாமல் 116 ரன்களும், யுவராஜ் சிங் 65 ரன்களும் எடுத்தனர். டி நடராஜன் இந்த போட்டியில் மூன்று விக்கெட்டுகளை எடுத்தார். தொடர்ந்து களமிறங்கிய தமிழகம் 47.1 ஓவரில் 230 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோற்றது. பாபா இந்திரஜித் அதிகபட்சமாக 64 ரன்கள் எடுத்த நிலையில், ஹரியானாவின் அன்ஷுல் காம்போஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முகமது ஷமிக்கு அர்ஜுனா விருது வழங்க விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு அனைவரையும் கவர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இந்த ஆண்டு அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். மத்திய அரசு வட்டார ஆதாரங்களின்படி, நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த விளையாட்டு விருதான அர்ஜுனா விருது பட்டியலில் ஷமி இடம்பெறாத நிலையில், அவரது பெயரை சேர்க்க விளையாட்டு அமைச்சகத்திடம் பிசிசிஐ சிறப்பு கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் ஜோடியான சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
கவுண்டி கிரிக்கெட்டில் சசெக்ஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்தார் சேட்டேஷ்வர் புஜாரா
தென்னாப்பிரிக்காவில் நடக்க உள்ள இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் புறக்கணிக்கப்பட்ட மூத்த பேட்டர் சேட்டேஷ்வர் புஜாரா மீண்டும் 2024 கவுண்டி சீசனுக்காக இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் கிளப் சசெக்ஸுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். 2022 இல் முதன்முதலில் கையெழுத்திட்டதன் மூலம், அந்த கிளப்புடன் அவர் மூன்றாவது சீசனில் வரும் ஆண்டில் களமிறங்க உள்ளார். 2024 சீசனைப் பொறுத்தவரை, கவுண்டி சாம்பியன்ஷிப்பின் தொடக்க ஏழு ஆட்டங்களுக்கு அவர் இருப்பார். புஜாரா 18 கவுண்டி சாம்பியன்ஷிப் ஆட்டங்களில் 64.24 சராசரியில் 1,863 ரன்கள் எடுத்தார். இதில் எட்டு சதங்கள் மற்றும் மூன்று அரை சதங்கள் அடங்கும். அவரது முதல் சீசனில் டெர்பிஷைருக்கு எதிராக 231 ரன்கள் எடுத்ததே சசெக்ஸிற்கான அவரது சிறந்த ஆட்டமாகும்.
உபுல் தரங்க தலைமையில் புதிய தேர்வுக்குழுவை அமைத்தது இலங்கை கிரிக்கெட் வாரியம்
தேசிய அணிகளைத் தேர்வு செய்வதற்காக இரண்டு வருட காலத்திற்கு புதிய கிரிக்கெட் தேர்வுக் குழுவை புதன்கிழமை இலங்கை கிரிக்கெட் வாரியம் அமைத்துள்ளது. இது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உடனடியாக நடைமுறைக்கு வரும் புதிய குழுவின் நியமனம் கௌரவ விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் மேற்கொள்ளப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் உபுல் தரங்கவும், அஜந்த மெண்டிஸ், இந்திக டி சரம், தரங்க பரணவிதான மற்றும் தில்ருவான் பெரேரா ஆகியோர் உறுப்பினர்களாகவும் இருப்பர். 2024 ஆம் ஆண்டு இலங்கைக்கான ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான தேசிய அணியைத் தேர்ந்தெடுப்பதே தேர்வுக் குழுவின் முதல் அதிகாரப்பூர்வ பணியாகும்.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டுக்கான ஆஸ்திரேலியாவின் விளையாடும் லெவன் அறிவிப்பு
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் துணைக் கேப்டனாக புதன்கிழமையன்று டிராவிஸ் ஹெட் மீண்டும் நியமிக்கப்பட்டார். பெர்த்தில் வியாழக்கிழமை தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் அவர் துணைக் கேப்டனாக செயல்படுவார். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அணியின் துணை கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் உள்ள நிலையில், அவருடன் இணைந்து இரண்டாவது துணை கேப்டனாக டிராவிஸ் ஹெட் செயல்பட உள்ளார். ஆஸ்திரேலியா விளையாடும் லெவன் : டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்.