மகளிர் கிரிக்கெட்டின் ரன் மெஷின் ஸ்மிருதி மந்தனா 10,000 ரன்களைக் கடந்து புதிய சாதனை
செய்தி முன்னோட்டம்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களைக் கடந்த நான்காவது வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 28) திருவனந்தபுரத்தில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற 4வது டி20 கிரிக்கெட் போட்டியின் போது அவர் இந்த மைல்கல்லை எட்டினார். இலங்கைக்கு எதிரான இந்தப் போட்டிக்கு முன்பாக, 10,000 ரன்களைத் தொட ஸ்மிருதிக்கு வெறும் 27 ரன்களே தேவைப்பட்டன. இன்றைய போட்டியில் அபாரமாக விளையாடிய அவர், இந்த ரன்களைக் கடந்து புதிய சரித்திரம் படைத்தார். இதன் மூலம் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 10,000 ரன்களைக் கடந்த உலகின் 4வது வீராங்கனை மற்றும் 2வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
முந்தைய சாதனை
முன்னர் இந்த சாதனையைச் செய்துள்ள வீராங்கனைகள்
இதற்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் மிதாலி ராஜ், இங்கிலாந்தின் சார்லோட் எட்வர்ட்ஸ், நியூசிலாந்தின் சுசி பேட்ஸ் ஆகியோர் மட்டுமே மகளிர் கிரிக்கட்டில் இந்த சாதனையை படைத்துள்ளனர். இன்றைய போட்டியில் அரைசதம் அடித்து அசத்திய ஸ்மிருதி மந்தனா, சமீபகாலமாகப் பல்வேறு சாதனைகளைத் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறார். இதே தொடரின் முதல் போட்டியிலேயே டி20 கிரிக்கெட்டில் 4,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்திருந்தார். 2025 இல் ஒருநாள் கிரிக்கெட்டில் 1,000 ரன்களுக்கு மேல் குவித்த முதல் வீராங்கனை என்ற உலக சாதனையைச் சமீபத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியின் போது படைத்தார். 2025 மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையை இந்தியா வெல்வதற்கு இவரது சிறப்பான பேட்டிங் முக்கியக் காரணமாக அமைந்தது.