அனைத்து பெண்களுக்கும் முன்மாதிரி! சானியா குறித்து நெகிழ்ச்சியுடன் கூறிய கணவர் சோயப் மாலிக்!
இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா தனது கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் 2023 இல் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் ரோஹன் போபண்ணாவுடன் நேற்று (ஜனவரி 27) விளையாடினார். 2005 இல் ஆஸ்திரேலிய ஓபனில் சானியா தனது கிராண்ட்ஸ்லாம் வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் அவர் 2023 இல் அங்கேயே தனது கிராண்ட் ஸ்லாம் வாழ்க்கையை முடித்தார். அவரது கடைசி போட்டிக்குப் பிறகு, சானியாவுக்கு பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அவரது கணவர் சோயப் மாலிக்கும் ஆஸ்திரேலிய ஓபனில் தனது இறுதிப் போட்டிக்குப் பிறகு, விளையாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் ஒரு முன் மாதிரியாக இருக்கிறீர்கள் என வாழ்த்தி ட்வீட் செய்துள்ளார்.
சானியா குறித்த சோயப் மாலிக் ட்வீட்
சானியா மிர்சா - சோயப் மாலிக் விவாகரத்து வதந்தி
சில மாதங்களுக்கு முன்பு சானியா மிர்சாவும், அவரது கணவர் சோயப் மாலிக்கும் விவாகரத்து செய்ய உள்ளதாக வதந்திகள் பரவின. இருப்பினும், விவாகரத்து தொடர்பாக வெளியான எந்த செய்திகளுக்கும் மறுப்போ அல்லது கருத்தோ தெரிவிக்காமல், இந்த ஜோடி மௌனம் காத்தது. பின்னர் அவர்கள் ஒன்றாக தி மிர்சா மாலிக் ஷோ என்ற அரட்டை நிகழ்ச்சியைத் தொடங்கினர். அதில் அவர்கள் தங்கள் வாழ்க்கையைப் பற்றி பிரபலங்களுடன் பேசுகிறார்கள். இந்த நிகழ்ச்சி தொடங்கியவுடன் வதந்திகள் ஓய்ந்தன. ஆனால் சானியாவின் ட்வீட்டுகளிலோ அல்லது இன்ஸ்டாகிராமில் உள்ள அவரது படங்களிலோ சோயப்பைப் பற்றிய எந்தக் குறிப்பையும் இன்னும் பார்க்கமுடியவில்லை. இதனால், அவர்களின் உறவின் எதிர்காலம் குறித்த சஸ்பென்ஸ் தொடர்ந்து நீடித்தே வருவதாக பலரும் கூறுகின்றனர்.