
ஒருநாள் உலகக்கோப்பையில் அதிக சிக்சர் அடித்து சாதனை படைத்த ரோஹித் ஷர்மா
செய்தி முன்னோட்டம்
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையில் 50 சிக்சர்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா படைத்துள்ளார்.
மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் புதன்கிழமை (நவம்பர் 15) நடந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதியில் நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் அவர் இந்த மைல்கல்லை எட்டினார்.
ரோஹித் ஷர்மா, 27 உலகக்கோப்பை போட்டிகளில் 50 சிக்சர்களை அடித்துள்ளார்.
முன்னதாக, வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெயில் 49 சிக்சர்கள் அடித்திருந்ததே ஒருநாள் உலகக்கோப்பையில் ஒரு வீரரின் அதிக சிக்சர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் ரோஹித் ஷர்மா மற்றும் கெயிலை தவிர ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் (43) மட்டுமே 40 சிக்சர்களுக்கும் மேல் அடித்துள்ளார்.
Rohit Sharma first batter to hit 50 sixes in ODI World Cup
ரோஹித்தின் உலகக் கோப்பை செயல்திறன்
சிக்சர் மட்டுமல்லாது, நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான இந்த போட்டியில் ரோஹித் ஷர்மா தனது 19வது ரன் மூலம் ஒருநாள் உலகக்கோப்பையில் 1,500 ரன்கள் மைல்கல்லையும் தொட்டார்.
இதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் (2,278), ரிக்கி பாண்டிங் (1,743), குமார் சங்கக்காரா (1,532), மற்றும் விராட் கோலி (1,610-க்கு மேல்) ஆகியோர் மட்டுமே இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.
ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் 7 சதங்களுடன் அதிக சதமடித்தவராகவும் ரோஹித் ஷர்மா உள்ளார். மேலும், ஏழு அரைசதங்களும் அடித்துள்ளார்.
இதற்கிடையே, ஒட்டுமொத்தமாக ஒருநாள் கிரிக்கெட்டில் 319 சிக்சர்கள் அடித்துள்ள ரோஹித், அதிக சிக்சர் அடித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.