
எம்எஸ் தோனியின் சாதனை முறியடிப்பு; டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இந்திய விக்கெட்-கீப்பர் ஆனார் ரிஷப் பண்ட்
செய்தி முன்னோட்டம்
லீட்ஸில் உள்ள ஹெடிங்லியில் இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாளில், இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் எம்எஸ் தோனியின் நீண்ட கால சாதனையை முறியடித்துள்ளார். முன்னதாக, போட்டியின் முதல் நாளில் 65 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த ரிஷப் பண்ட் இரண்டாவது நாளான சனிக்கிழமை (ஜூன் 21) 146 பந்துகளில் சதத்தை எட்டினார். இதில் 4 சிக்சர்கள் மற்றும் 10 பவுண்டரிகள் அடங்கும். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்டின் ஏழாவது சதமாகும். இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அதிக சதங்கள்
6 சதங்கள் அடித்துள்ள எம்எஸ் தோனி
முன்னதாக, எம்எஸ் தோனி மற்றும் ரிஷப் பண்ட் தலா 6 சதங்களுடன் சமனில் இருந்த நிலையில், தற்போது ரிஷப் பண்ட் தோனியை பின்னுக்குத் தள்ளியுள்ளார். தோனி தனது 6 சதங்களில் ஐந்தை இந்திய மண்ணில் எடுத்த நிலையில், ரிஷப் பண்ட் தனது 7 சதங்களில் ஐந்தை இந்தியாவிற்கு வெளியே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் ரிஷப் பண்டிற்கு அடுத்ததாக, விரித்திமான் சாகா 3 சதங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இதற்கிடையே, முன்னதாக, போட்டியின் முதல் நாளில் SENA எனப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அதிக ரன் குவித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற எம்எஸ் தோனியின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.