ODI World Cup 2023 : அரையிறுதி அல்லது இறுதிப் போட்டி டையில் முடிந்தால் என்ன நடக்கும்?
நவம்பர் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் அரையிறுதியும், நவம்பர் 19 ஆம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ள நிலையில், ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடர் இறுதிக் கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. 2019 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய நிலையில், அந்த போட்டி டையில் முடிந்தது. அதைத் தொடர்ந்து நடந்த ஒரு சூப்பர் ஓவர் ஆட்டமும் டையில் முடிந்த நிலையில், இந்த போட்டி கிரிக்கெட் உலகின் மனதில் இன்னும் பசுமையாக உள்ளது. இறுதியில், அதிக பவுண்டரி எண்ணிக்கையின் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 2023 உலகக்கோப்பையில், 2019 இல் ஏற்பட்டது போன்ற குழப்பத்தைத் தவிர்க்க டையில் முடிவடையும் போட்டிகளுக்கான விதிகளை ஐசிசி சிறிது மாற்றியுள்ளது.
ஐசிசியின் புதிய விதிகள்
ஐசிசி வெளியிட்டுள்ள தனது ஆட்ட நிலைமை குறித்த விதிகளில் "போட்டி டையானால் சூப்பர் ஓவர் விளையாடப்படும். சூப்பர் ஓவர் டையானால், வெற்றி பெறும் வரை அடுத்தடுத்த சூப்பர் ஓவர்கள் விளையாடப்படும். ஒரு தரப்புக்கு வெற்றி கிடைக்கும்வரை, வரம்பற்ற சூப்பர் ஓவர்கள் விளையாடப்படும்." எனத் தெரிவித்துள்ளது. அதாவது, ஒரு லீக் நிலை ஆட்டம் டையில் முடிந்திருந்தால், ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் சென்றிருக்கும். ஆனால், அதுபோன்ற ஒரு சூழல் லீக் சுற்றில் உருவாகவில்லை. எளிமையாக சொல்லவேண்டும் என்றால், அடுத்து நடக்க உள்ள அரையிறுதி அல்லது இறுதிப் போட்டிகள் டையில் முடிந்தால், போட்டி சூப்பர் ஓவருக்கு மாற்றப்படும். அதுவும் டையில் முடிந்தால் ஒரு அணி வெல்லும்வரை அடுத்தடுத்து சூப்பர் ஓவர்கள் விளையாடப்படும்.