ஐபிஎல் 2026: சதம் தவறவிட்ட சோகத்தில் சூர்யவன்ஷி! டக்அவுட்டில் கேப்டன் ரியான் பராக் காரசார அறிவுரை - வைரல் வீடியோ
செய்தி முன்னோட்டம்
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2026 குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 96 ரன்களில் அவுட்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். இதனால் மிகுந்த ஏமாற்றத்துடன் டக்அவுட் திரும்பிய சூர்யவன்ஷியிடம், ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் மிகவும் தீவிரமாகப் பேசிய காட்சிகள் நேரலை கேமராவில் பதிவாகி வைரலாகி வருகின்றன. சமூக வலைதளங்களில் இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், சதம் தவறவிட்ட சோகத்தில் இருந்த இளம் வீரருக்கு கேப்டன் பராக் சில முக்கிய அறிவுரைகளை வழங்கியதாகப் பதிவிட்டு வருகின்றனர். இந்த நடப்பு ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக 97 ரன்களில் அவுட்டான சூர்யவன்ஷி, மீண்டும் தொண்ணூறுகளில் அவுட்டாகி சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Riyan Parag scolding Vaibhav Sooryavanshi after he missed a well deserved 100 #GTvsRR pic.twitter.com/oPGBCXzvAX
— DJAY (@djaywalebabu) May 29, 2026
சூர்யவன்ஷி அதிரடி பேட்டிங்
ஆரம்பத்தில் நிதானம் காட்டிப் பின்னர் குஜராத் பந்துவீச்சை துவம்சம் செய்த வைபவ் சூர்யவன்ஷி
முந்தைய போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக 29 பந்துகளில் 97 ரன்கள் குவித்த சூர்யவன்ஷிக்கு, இப்போட்டியில் குஜராத் பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்தில் கடும் சவாலாகத் திகழ்ந்தனர். சிராஜ் மற்றும் ரபாடா ஆகியோர் கட்டுக்கோப்பாகப் பந்துவீசியதால், சூர்யவன்ஷி தனது முதல் சிக்ஸரை அடிக்க 13 பந்துகள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ஜெயஸ்வால் 1 ரன்னிலும், துருவ் ஜூரல் 7 ரன்னிலும் அவுட்டாகி ராஜஸ்தான் அணி தடுமாறிய போது, சிராஜ் வீசிய ஓவரில் 21 ரன்கள் விளாசி சூர்யவன்ஷி ஆட்டத்தை மாற்றினார். தனது ஐபிஎல் வாழ்க்கையின் மெதுவான அரைசதத்தை 31 பந்துகளில் கடந்த அவர், பின்னர் ஜடேஜாவுடன் இணைந்து அதிரடியாக ஆடி வெறும் 15 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார்.
வரலாற்று உலக சாதனைகள்
டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனை படைத்த 15 வயது இளம் புயல் சூர்யவன்ஷி
இப்போட்டியில் சூர்யவன்ஷி சதம் அடிக்காவிட்டாலும், வெறும் 440 பந்துகளில் 1,000 ஐபிஎல் ரன்களைக் கடந்து, மிகக் குறைந்த பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டிய வீரராக உலக சாதனை படைத்தார். மேலும், டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரே ஒரு தொடரின் பவர்பிளே ஓவர்களில் (1-6 ஓவர்கள்) 500 ரன்களைக் கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற பிரம்மாண்ட சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். இருப்பினும், 47 பந்துகளில் 96 ரன்கள் எடுத்திருந்த போது ரபாடா பந்துவீச்சில் அவுட்டாகி, மைதானத்தில் இருந்த ரசிகர்களையும் ஒட்டுமொத்த ராஜஸ்தான் முகாமையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 90களில் அவுட்டான கேஎல் ராகுல், வார்னர், ருதுராஜ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோரின் மோசமான சாதனைப் பட்டியலிலும் சூர்யவன்ஷி இணைந்துள்ளார்.