Page Loader
சவூதி அரேபியாவில் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை நடத்த பிசிசிஐ முடிவு எனத் தகவல்
சவூதி அரேபியாவில் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை நடத்த பிசிசிஐ முடிவு

சவூதி அரேபியாவில் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை நடத்த பிசிசிஐ முடிவு எனத் தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 17, 2024
06:23 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வீரர்கள் ஏலம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வெளிநாட்டில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி சவூதி அரேபியாவின் ரியாத், நவம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் ஐபிஎல் 2025 மெகா ஏல நிகழ்வை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த ஸ்போர்ட்ஸ்டாரின் அறிக்கையின்படி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. ஆனால் ஐபிஎல் உரிமையாளர்களுக்கு திட்டமிட்ட அட்டவணை குறித்து அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்படி பெர்த்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா தொடங்கிய இரண்டு நாட்களில் ஏலம் நடைபெறும் எனத் தெரிகிறது.

ரியாத்

ரியாத் தேர்வின் பின்னணி

முன்னதாக, லண்டன் மற்றும் சிங்கப்பூரும் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், ரியாத் அதன் சாதகமான நேர மண்டலத்தின் காரணமாக ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கான இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது எனத் தெரிகிறது. பிசிசிஐ தற்போது ரியாத்தில் 10 உரிமையாளர்கள், குழு பிரதிநிதிகள் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோசினிமாவின் ஒளிபரப்பு குழுக்களுக்கு இடமளிக்கும் இடத்தை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஐபிஎல் நிர்வாகக் குழு அக்டோபர் 31ஆம் தேதியை அணி உரிமையாளர்கள் தங்கள் வீரர்கள் தக்கவைப்பு பட்டியலை இறுதி செய்ய காலக்கெடுவாக நிர்ணயித்துள்ளது. இந்த ஏலத்தில் சில மாற்றங்களுடன் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட நேரடித் தக்கவைப்பு மற்றும் ரைட் டு மேட்ச் விருப்பத்தைப் பயன்படுத்தி அணிகள் ஆறு வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம்.