இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ராவின் 26வது பிறந்தநாள் இன்று
ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவரும், இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரருமான நீரஜ் சோப்ரா இன்று தனது 26வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 2021 ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் முதல் தடகள தங்கப் பதக்கத்தை வென்றதிலிருந்து நீரஜ் சோப்ரா உலக அளவில் தலைசிறந்த ஈட்டி எறிதல் வீரர்களில் ஒருவராக வலம் வருகிறார். அதை அவரது கடின உழைப்பால் மட்டுமே அடைந்தார். 19 வயதில் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கத்தை வென்று தனது திறமையை உலகுக்கு எடுத்துரைத்த நீரஜ் சோப்ரா, 2016 இல் ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அதன் பிறகு தொடர்ந்து சீனியர் போட்டிகளில் விளையாடிய அவர், ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார்.
வெற்றிக்கு அதிர்ஷ்டம் மட்டுமே காரணம் அல்ல
ஜகார்த்தாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டி 2018 மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறிதல் தங்கம் வென்றார். தொடர்ந்து பல போட்டிகளில் வெற்றி பெற்ற அவர், உச்சகட்டமாக 2021இல் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று இந்திய விளையாட்டு வரலாற்றில் தனது பெயரை வலுவாக பதித்தார். இது வெறும் அதிர்ஷ்டத்தால் மட்டுமே பெற்றது அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், 2022இல் மதிப்புமிக்க டயமண்ட் லீக் கோப்பையை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். 2023இல் புடாபெஸ்டில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் மற்றும் ஹாங்சோவில் நடைபெற்ற 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று தொடர்ந்து சிறப்பான ஃபார்மில் இருந்து வருகிறார்.