ஆசிய சாம்பியன்ஸ் டிராபி மகளிர் ஹாக்கி போட்டியில் பட்டம் வென்றது இந்திய அணி
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய ஹாக்கி அணி ஜப்பானை வீழ்த்தி பட்டம் வென்றது. முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 6) இரவு நடந்த இந்த போட்டியில், ஆரம்பம் முதலே தாக்குதல் ஆட்டத்தை இந்திய வீராங்கனைகள் வெளிப்படுத்தினர். ஜப்பான் தற்காப்பு ஆட்டம் ஆடினாலும், இந்திய வீராங்கனைகள் அதை தவிடு பொடியாக்கி, போட்டியின் 17வது நிமிடத்தில் சங்கீதா குமாரி கோல் அடித்து இந்தியாவுக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே ஜப்பானும் ஒரு கோல் அடித்த நிலையில், இந்திய அணியின் முறையீட்டால் கோல் திரும்ப பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து முதல் பாதியில் வேறு யாரும் கோல் அடிக்காததால் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.
அடுத்தடுத்து கோல் அடித்த இந்திய வீராங்கனைகள்
இரண்டாவது பாதி தொடங்கிய பிறகு, இரு அணிகளும் கோலுக்காக கடுமையாக போராடிய நிலையில், இந்தியாவின் நேஹா கோயல் 46வது நிமிடத்தில் கோல் அடித்தார். தொடர்ந்து, போட்டி முடிவடையும் தருவாயில், லால்ரெம்சியாமி 57வது நிமிடத்திலும், வந்தனா கட்டாரியா 60வது நிமிடத்திலும் கோல் அடித்து இந்திய அணிக்கு 4-0 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். இதன் மூலம், 2016இல் சிங்கப்பூரில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு இரண்டாவது முறையாக இந்தியா பட்டத்தை வென்றுள்ளது. 2022 டிசம்பரில் ஜான்னேகே ஸ்கோப்மேன் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு எஃப்ஐஹெச் நேஷன்ஸ் கோப்பையை வென்று ப்ரோ லீக்கிற்கு தகுதி பெற்ற பிறகு, இந்தியா பெறும் முதல் பட்டம் இதுவாகும்.