108 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி
வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த மகளிர் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தை 108 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற வங்கதேச கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியை பொறுத்தவரை ஜெமிமா ரோட்ரிகஸ் அதிகபட்சமாக 86 ரன்கள் எடுத்த நிலையில், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 52 ரன்கள் எடுத்தார். இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணியில் சுல்தானா காதுன் மற்றும் நகிதா அக்தர் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
120 ரன்களில் சுருண்டது வங்கதேசம்
229 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வங்கதேச கிரிக்கெட் அணியில் பர்கானா ஹாக் அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்த நிலையில், முர்ஷிதா காதுன் (12) மற்றும் ரித்து மோனி (27) மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்களை எடுத்தனர். இந்திய அணியின் அபார பந்துவீச்சால், இவர்களை தவிர மற்ற அனைத்து வீராங்கனைகளும் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே ரன்களை எடுத்ததால், 35.1 ஓவர்களில் 120 ரன்களுக்கு சுருண்டது. பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்ட ஜெமிமா ரோட்ரிகஸ், பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதற்கிடையே, இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 1-1 என சமநிலை பெற்றுள்ளது.