அமெரிக்காவில் நடக்கும் டி20 உலகக்கோப்பைக்கான 3 மைதானங்களை உறுதிப்படுத்தியது ஐசிசி
இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அடுத்த மாதம் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அடுத்த ஆண்டு நடக்க உள்ள டி20 உலகக்கோப்பை இப்போதே தயாராகி வருகிறது. 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து டி20 உலகக்கோப்பையை நடத்தவுள்ளன. இதற்காக அமெரிக்காவின் டல்லாஸ், புளோரிடா மற்றும் நியூயார்க்கில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கும் பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில், அமெரிக்காவில் தயார் செய்யப்பட்டுள்ள இந்த மூன்று மைதானங்களை ஐசிசி அங்கீகரித்துள்ளது.
நியூயார்க்கில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி
டி20 கிரிக்கெட் உலகக்கோப்பைக்காக மூன்று மைதானங்கள் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் நியூயார்க் நகரம் 34,000 இருக்கைகளுடன் மிகப்பெரிய மைதானமாக உள்ளது. இந்த மைதானத்தில் அதிக ரசிகர்களால் விரும்பப்படும் இந்தியா vs பாகிஸ்தான் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த மைதானத்தில் வசதிகளை அதிகரிக்க மாடுலர் ஸ்டேடியம் தீர்வுகள் பயன்படுத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐசன்ஹோவர் பூங்காவில் 34,000 இருக்கைகள் கொண்ட மாடுலர் ஸ்டேடியம் அமைப்பதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் கிராண்ட் ப்ரேரி மற்றும் ப்ரோவர்ட் கவுண்டி ரசிகர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான இருக்கைகளை விரிவுபடுத்துவதற்காக அளவு அதிகரிக்கப்படும் என்றும் ஐசிசி உறுதிப்படுத்தியது.