இலங்கை கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்! சனத் ஜெயசூர்யா இடத்தைப் பிடிக்கும் இந்தியாவிற்கு உலகக்கோப்பை வென்று கொடுத்த பயிற்சியாளர்
செய்தி முன்னோட்டம்
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து சனத் ஜெயசூர்யா விலகியதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணிக்கு 2011 இல் உலகக்கோப்பை வென்று கொடுத்த பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 2026 டி20 உலகக்கோப்பையில் இலங்கை அணி சந்தித்த ஏமாற்றத்தைத் தொடர்ந்து இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவின் முன்னாள் நட்சத்திர வீரரான 58 வயது கேரி கிர்ஸ்டன், வரும் ஏப்ரல் 15, 2026 முதல் இலங்கை தேசிய அணியின் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளுக்கும் பயிற்சியாளராகப் பொறுப்பேற்பார். இவருடன் இரண்டு ஆண்டுகால ஒப்பந்தம் (ஏப்ரல் 14, 2028 வரை) கையெழுத்தாகியுள்ளது.
இலக்கு
2027 உலகக்கோப்பையே முதன்மை இலக்கு
இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கிர்ஸ்டனின் மிக முக்கியமான பணி தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ள 2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு இலங்கை அணியைத் தயார்படுத்துவது மற்றும் தேசிய உயர்தர செயல்திறன் மையத்தின் கட்டமைப்பை வலுப்படுத்துவது ஆகும். சமீபத்தில் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருந்த கிர்ஸ்டனுக்கு அங்கு பெரும் சவால்கள் காத்திருந்தன. முன்னதாக, 2024 டி20 உலகக்கோப்பையில் அமெரிக்கா மற்றும் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றதைத் தொடர்ந்து, அணியில் ஒற்றுமை இல்லை என அவர் பகிரங்கமாக விமர்சித்தார். நிர்வாகத் தலையீடுகள் மற்றும் தேர்வுக் குழு அதிகாரங்கள் பறிக்கப்பட்டதால், வெறும் 6 மாதங்களில் (அக்டோபர் 2024) தனது பதவியை ராஜினாமா செய்தார்.
சாதனை
பயிற்சியாளராக கிர்ஸ்டனின் சாதனைப் பயணம்
கேரி கிர்ஸ்டன் உலக கிரிக்கெட்டின் மிகவும் மதிக்கப்படும் பயிற்சியாளர்களில் ஒருவர்: இந்திய அணி (2008-2011): எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய அணி 28 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் உலகக்கோப்பை வென்றபோது இவரே பயிற்சியாளர். தென்னாப்பிரிக்கா (2011-2013): இவரது காலத்தில் தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் உலகின் முதன்மை இடத்தைப் பிடித்தது.