ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பதி ராய்டு
கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய அம்பதி ராயுடு, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த 8 நாட்களிலேயே அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஜூன் 2023 இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ராயுடு, 8 நாட்களுக்கு முன் ஆந்திரா முதலவர் ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் சேர்ந்தார். இந்நிலையில், இன்று ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டிருக்கும் அவர், "ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சியில் இருந்து விலகவும், அரசியலில் இருந்து சிறிது காலம் ஒதுங்கவும் முடிவு செய்துள்ளேன் என்பதை அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன். அடுத்தகட்ட நடவடிக்கை உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்." என்று தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டராக இருந்தவர் இவர் ஆவார்.