உலகக்கோப்பை செஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார் ஆர்.பிரக்ஞானந்தா
இந்தியாவின் இளம் செஸ் கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா FIDE உலகக் கோப்பை செஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார். முன்னதாக, காலிறுதியில் சக இந்திய வீரரான அர்ஜுன் எரிகைசியை எதிர்கொண்ட பிரக்ஞானந்தா 5-4 என்ற கணக்கில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 17) போராடி வெற்றி பெற்றார். இதையடுத்து ஒரு நாள் ஓய்வுக்குப் பிறகு, சனிக்கிழமை பிரக்ஞானந்தா அமெரிக்காவின் ஃபேபியானோ கருவானாவை அரையிறுதியில் எதிர்கொள்கிறார். மற்றொரு அரையிறுதியில் மேக்னஸ் கார்ல்சன் அஜர்பைஜானின் நிஜாத் அபாசோவை எதிர்கொள்கிறார். இதற்கிடையே, இந்தியாவிலிருந்து பங்கேற்ற டி.குகேஷ் மற்றும் விதித் குஜ்ராத்தியும் காலிறுதியில் தோற்றுவெளியேறினர். மகளிருக்கான அரையிறுதியில், பல்கேரியாவின் நூர்கியுல் சலிமோவா, உக்ரைனின் அன்னா முசிச்சுக்கை வீழ்த்தி, இறுதிப்போட்டியில் ரஷியாவின் அலெக்ஸாண்ட்ரா கோரியச்கினாவுக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாட உள்ளார்.