இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த ரமேஷ் பவார் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு மாற்றப்பட்டதில் இருந்து அந்த பதவி காலியாக உள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்தியா அல்லது வேறு நாட்டிற்காக சர்வதேச அளவில் விளையாடி இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்லது குறைந்தபட்சம் தேசிய கிரிக்கெட் அகாடெமியின் நிலை 'சி' பயிற்சி சான்றிதழ் அல்லது ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் இருந்து இதற்கு சமமான சான்றிதழ் மற்றும் குறைந்தபட்சம் 50 முதல் தர விளையாட்டுகள் விளையாடியவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சியாளர் தேர்வு செயல்முறை
மேலே கூறிய நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்றாலும், குறைந்தபட்சம் ஒரு சர்வதேச கிரிக்கெட் அணிக்கு ஒரு சீசன் பயிற்சியளித்த அனுபவம் அல்லது இரண்டு சீசன்களுக்கு டி20 லீக் அணியைப் பயிற்றுவித்திருந்தால், அவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர். இந்த பதவிக்கு வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை என்றாலும், பிசிசிஐ கொள்கையின் காரணமாக, 60 வயதுக்கு மேற்பட்ட நபர் தேர்வுக்கு தகுதியுடையவராக கருதப்படுவதில்லை. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 10 ஆகும். அதன் பிறகு பிசிசிஐ விண்ணப்பதாரர்களை ஷார்ட்லிஸ்ட் செய்து அசோக் மல்ஹோத்ரா தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனைக் குழுவிடம் அனுப்பும். அவர்கள் நேர்காணல் நடத்தி தேர்வு செய்வர்.