இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்: ஜிம்பாப்வே தொடரில் இருந்து கௌதம் கம்பீர் விலகல்! பிசிசிஐ அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வரவிருக்கும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் அவரது உதவிப் பயிற்சியாளர்கள் இந்தத் தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்று பிசிசிஐ உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 2024 ஜூலையில் பொறுப்பேற்ற பிறகு கம்பீர் எவ்வித இடைவெளியுமின்றி தொடர்ந்து பயணித்து வருவதால், அவருக்கு இந்தத் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
விவிஎஸ் லக்ஷ்மண்
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பும் விவிஎஸ் லக்ஷ்மண்
கௌதம் கம்பீருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தின் தலைவராக இருக்கும் இந்திய கிரிக்கெட் லெஜண்ட் விவிஎஸ் லக்ஷ்மண் தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் லக்ஷ்மண் தேசிய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பது இதுவே முதல் முறையாகும்.
இதற்கு முன்னால் ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக இருந்த காலத்திலும், அவர் இல்லாத சில தொடர்களில் லக்ஷ்மண் தற்காலிகமாக இந்திய அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய கூட்டணி
கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருடன் இணையும் புதிய கூட்டணி
இந்த ஜிம்பாப்வே தொடரில் பயிற்சியாளர் விவிஎஸ் லக்ஷ்மண், இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய டி20 கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருடன் இணைந்து முதன்முறையாகப் பணியாற்றவுள்ளார்.
முன்னதாகத் தங்களது மோசமான ஃபார்ம் காரணமாக சூர்யகுமார் யாதவ் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு அணியிலிருந்தும் ஓரங்கட்டப்பட்டார்.
அவருக்குப் பதிலாக அண்மையில் அயர்லாந்து தொடரில் கேப்டனாக அறிமுகமான ஷ்ரேயாஸ் ஐயர், தற்பொழுது இந்தத் தொடரிலும் இந்திய அணியை வழிநடத்தவுள்ளார்.
இந்த புதிய கூட்டணி இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித்தருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சவால்
தொடர் தோல்விகளை முடிவுக்குக் கொண்டுவரும் சவால்
இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, சமீபத்திய சர்வதேச தொடர்களில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
அயர்லாந்து தொடரில் ஒயிட்வாஷ் ஆன இந்திய அணி, அதனைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரையும் 0-4 என்ற கணக்கில் பறிகொடுத்தது.
தற்பொழுது தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியடைந்துள்ள இந்திய அணியின் இந்த மோசமான சரிவை மாற்றி, மீண்டும் வெற்றிப் பாதைக்குக் கொண்டுவர வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும் சவாலும் தற்பொழுது லக்ஷ்மண் முன்னால் உள்ளது.
தலைமைப் பயிற்சியாளர்
தலைமை பயிற்சியாளர் பதவியைத் தவிர்த்த பின்னணி
கடந்த 2024 ஆம் ஆண்டில் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிந்த போது, அவருக்குப் பதிலாக இந்திய அணியின் முழு நேர தலைமை பயிற்சியாளராக லக்ஷ்மண் தான் நியமிக்கப்படுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தேசிய கிரிக்கெட் அகாடமியின் மேம்பாட்டுப் பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்த விரும்பியதால், அவர் அந்தப் பதவியைப் பெற விரும்பவில்லை.
அதன் பின்னரே கௌதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார்.
தற்பொழுது கம்பீரின் இடைவெளியை நிரப்ப லக்ஷ்மண் மீண்டும் தற்காலிகமாகப் பயிற்சியாளர் களத்தில் இறங்கியுள்ளார்.