
2036 ஒலிம்பிக்கிற்கு முன்னோட்டமாக 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்; தீவிரமாக தயாராகும் மத்திய அரசு
செய்தி முன்னோட்டம்
2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை (CWG) நடத்த அகமதாபாத்தைப் பரிந்துரைத்ததைத் தொடர்ந்து, இந்தியாவின் கவனம் உடனடியாக 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான அதன் லட்சிய இலக்கை நோக்கித் திரும்பியுள்ளது. இந்த கனவை நிஜமாக்க வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார், மத்திய அமைச்சர் அமித் ஷா இந்த பன்முக நகர ஒலிம்பிக் ஏலத்திற்கான முயற்சிகளைக் கவனித்து வருகிறார். 2030 ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தவுள்ள தோஹா தான், 2036 ஒலிம்பிக் போட்டிக்கான ஏலத்தில் அகமதாபாத்துக்கு முக்கியப் போட்டியாளராக உள்ளது. காமன்வெல்த் போட்டிகளைப் போலல்லாமல், ஒலிம்பிக் போட்டிகளைப் பல நகரங்களுக்கு விரிவுபடுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
நகரங்கள்
வெவ்வேறு நகரங்களில் ஒலிம்பிக் போட்டிகள்
அதன்படி, புவனேஷ்வர் ஹாக்கிக்கும், போபால் துடுப்புப் படகுப் போட்டிக்கும், புனே கேனோயிங் மற்றும் கயாக்கிங் போட்டிக்கும், மும்பை கிரிக்கெட்டிற்குமான விளையாட்டு நகரங்களாகச் செயல்படலாம் என முன்மொழியப்பட்டுள்ளது. இதில் அகமதாபாத், கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான பிரதான மையமாக இருக்கும். அமித் ஷா சமீபத்தில், நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு அருகில் உள்ள சர்தார் படேல் விளையாட்டு வளாகத்தில் பத்து புதிய ஸ்டேடியங்கள் கட்டப்படும் என அறிவித்து, 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா உறுதியுடன் இருப்பதாக வலியுறுத்தினார். இந்த லட்சியங்களுக்கு ஆதரவாக, அகமதாபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (AUDA) முக்கிய மண்டல மாற்றங்களைத் தொடங்கியுள்ளது.
முதலீடு
விளையாட்டு நகரங்களுக்கு முதலீடு
சனந்த்-எஸ்பி ரிங் ரோடு வழித்தடத்திற்கு அருகிலுள்ள நிலங்கள், ஷிலாஜ், மணிப்பூர் மற்றும் பலோடியா போன்ற முதன்மையான விவசாய மண்டலமாக முன்னர் வகைப்படுத்தப்பட்ட பகுதிகள் உட்பட, குடியிருப்பு மண்டலங்களாக மாற்றப்படுகின்றன. நாரன்புரா விளையாட்டு வளாகம் மற்றும் பிரம்மாண்டமான சர்தார் வல்லபாய் படேல் (SVP) விளையாட்டு வளாகம் போன்ற ₹6,000 கோடிக்கு அதிகமான திட்டங்களும் இதில் அடங்கும். இந்த நடவடிக்கைகள், வீடுகள், விளையாட்டு வசதிகள் மற்றும் போக்குவரத்து இணைப்புகளுக்கான பரந்த பகுதிகளை உருவாக்கவும், 2028 க்குள் அனைத்துத் திட்டங்களையும் முடித்து ஒலிம்பிக்கிற்குத் தயாராகவும் நோக்கமாகக் கொண்டுள்ளன.