LOADING...
மைதான அரங்குக்கு பெயர்; இந்திய மகளிர் கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு கௌரவம் சேர்த்தது ஆந்திர கிரிக்கெட் சங்கம்
இந்திய மகளிர் கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு கௌரவம் சேர்த்தது ஆந்திர கிரிக்கெட் சங்கம்

மைதான அரங்குக்கு பெயர்; இந்திய மகளிர் கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு கௌரவம் சேர்த்தது ஆந்திர கிரிக்கெட் சங்கம்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 06, 2025
04:57 pm

செய்தி முன்னோட்டம்

ஆந்திர கிரிக்கெட் சங்கம் (ACA) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, விசாகப்பட்டினத்தில் உள்ள ACA-VDCA கிரிக்கெட் மைதானத்தில் இரண்டு அரங்கங்களுக்கு மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளான மிதாலி ராஜ் மற்றும் ரவி கல்பனா ஆகியோரின் பெயர்களைச் சூட்ட முடிவு செய்துள்ளது. விசாகப்பட்டினம் மைதானத்தில் மகளிருக்காக அளிக்கப்படும் இந்த முதல் கௌரவம், அக்டோபர் 12 அன்று இந்தியா vs ஆஸ்திரேலியா மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக அதிகாரப்பூர்வமாக நடைபெறும். இந்த முயற்சி, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, ஆந்திரப் பிரதேச தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நர லோகேஷ் உடனான சமீபத்திய கலந்துரையாடலின் போது விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

மகளிர் கிரிக்கெட்

மகளிர் கிரிக்கெட்டர்களுக்கு முக்கியத்துவம்

முக்கிய மைதானங்களில் பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு உரிய கௌரவம் அளிக்கப்படுவதில்லை என்று சுட்டிக்காட்டிய மந்தனா, இளம் பெண்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பெண் ஜாம்பவான்களின் பெயர்களை மைதான அரங்கங்களுக்குச் சூட்ட வேண்டும் என்று கோரினார். ஸ்மிருதி மந்தனாவின் வேண்டுகோளுக்கு உடனடியாகப் பதிலளித்த அமைச்சர் நர லோகேஷ், ACA உடன் இணைந்து இந்த முடிவைச் செயல்படுத்தினார். இது விளையாட்டில் பாலின சமத்துவத்திற்கான முக்கியமான அர்ப்பணிப்பைக் குறிக்கிறது என்று அவர் தெரிவித்தார். கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவரான மிதாலி ராஜ் இந்தியாவுக்காக 333 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 10,868 ரன்கள் குவித்துள்ளார். அவரது தலைமையில் 2017 ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறியது குறிப்பிடத்தக்கது. ரவி கல்பனாவும் தேசிய அணிக்காக ஏழு போட்டிகளில் விளையாடியுள்ளார்.