போஸ்ட் போட முடியலையே! இந்தியாவில் மீண்டும் முடங்கிய எக்ஸ்! சென்னை, கோவை உட்பட பல நகரங்களில் பாதிப்பு!
செய்தி முன்னோட்டம்
எலான் மஸ்கிற்குச் சொந்தமான எக்ஸ் தளம், வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) மாலை மீண்டும் தொழில்நுட்பக் கோளாறுகளைச் சந்தித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் இது இரண்டாவது முறையாக நிகழ்ந்த முடக்கமாகும். டவுண்டெடெக்டர் (Downdetector) தளத்தின்படி, நூற்றுக்கணக்கான பயனர்கள் இந்தத் தளம் சரியாகச் செயல்படவில்லை என்று புகார் அளித்துள்ளனர். இந்தியாவின் முக்கிய நகரங்களில், குறிப்பாக சென்னை, கோயம்புத்தூர், டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா, சண்டிகர், ஜெய்ப்பூர், லக்னோ மற்றும் அகமதாபாத் போன்ற நகரங்களில் அதிக பாதிப்பு உள்ளது. இந்த நகரங்களில் உள்ள பயனர்கள் தங்களது ஃபீட் அப்டேட் ஆகவில்லை என்றும், மொபைல் ஆப் மற்றும் சர்வர் கனெக்ஷனில் சிக்கல்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
புள்ளிவிவரங்கள்
பாதிப்பின் புள்ளிவிவரங்கள்
வெள்ளிக்கிழமை மாலை சுமார் 6:47 மணியளவில் தொடங்கிய இந்தப் பாதிப்பு, இரவு 8 மணியளவில் உச்சத்தைத் தொட்டது. 38% பயனர்கள் தங்களது ஃபீட் டைம்லைன் அப்டேட் ஆகவில்லை என்று புகாரளித்தனர். 35% பயனர்கள் சர்வர் அப்ளிகேஷன் கோளாறுகளைச் சந்தித்தனர். 28% பயனர்கள் மொபைல் ஆப்பை அணுகுவதில் சிரமப்பட்டனர். இந்த முடக்கம் குறித்து எக்ஸ் நிர்வாகத்திடம் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. பொதுவாக இத்தகைய பாதிப்புகள் ஏற்படும்போது, ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள பயனர்கள் சமர்ப்பிக்கும் புகார்களைக் கொண்டு ஹீட் மேப் மூலம் பாதிப்புள்ள பகுதிகள் கண்டறியப்படுகின்றன. மைக்ரோ-பிளாக்கிங் தளமான எக்ஸ், அடிக்கடி சந்திக்கும் இத்தகைய முடக்கங்கள் அதன் பயனர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.