சம்பளம், சலுகைகள் எவையும் வேண்டாம்: 543 எம்பிக்களில் இந்த 2 பேர் மட்டும் தனி ரகம்; யார் இவர்கள்?
செய்தி முன்னோட்டம்
நாடாளுமன்றத்தில் அரசியல் மோதல்கள் ஒருபுறம் இருந்தாலும், எம்பிக்களின் சம்பளம் மற்றும் சலுகைகள் உயர்வு என்று வரும்போது அனைத்துக் கட்சியினரும் பொதுவாக ஒன்றுபடுவார்கள். ஆனால், தற்போதைய மக்களவையில் இரண்டு உறுப்பினர்கள் மட்டும் தங்களுக்குரிய அரசு சம்பளத்தைப் பெற மறுத்து முன்மாதிரியாகத் திகழ்கின்றனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் பெறப்பட்ட பதிலின் மூலம் இந்த சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு வேறு துருவங்களைச் சேர்ந்த பின்வரும் இந்த உறுப்பினர்கள், மக்கள் பணத்தைச் சேமிக்கும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளனர். ஹரியானாவின் குருக்ஷேத்ரா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நவீன் ஜிண்டால். உள் மணிப்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் பிமோல் அகோய்ஜம்.
நவீன் ஜிண்டால்
நவீன் ஜிண்டாலின் அதிரடி முடிவு
இந்த இருவருக்கும் இடையே பொருளாதார ரீதியாகப் பெரிய இடைவெளி இருந்தாலும், சேவை மனப்பான்மையில் இருவரும் ஒன்றாக உள்ளனர்: நவீன் ஜிண்டால்: இவரது சொத்து மதிப்பு சுமார் ₹1,241 கோடி. டாக்டர் பிமோல் அகோய்ஜம்: இவரது சொத்து மதிப்பு சுமார் ₹97 லட்சம். கோடிக்கணக்கான சொத்துக்கள் இல்லாத நிலையிலும், டாக்டர் பிமோல் அகோய்ஜம் சம்பளம் வாங்க மறுத்துள்ளது பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது. பாஜக எம்பி நவீன் ஜிண்டால் ஒரு படி மேலே சென்று, தனது சம்பளத்தை மட்டுமல்லாமல், அரசு வழங்கும் அனைத்து படிதொகைகள் மற்றும் அதிகாரப்பூர்வ சலுகைகளையும் வாங்க மறுத்துள்ளார். அரசு வசதிகளைப் பயன்படுத்தாமல் சொந்தச் செலவிலேயே மக்கள் பணியாற்றப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.
பணக்காரர்கள்
மக்களவையின் பெரும் பணக்காரர்கள்
தற்போதுள்ள 543 உறுப்பினர்களில் மிக அதிக சொத்து மதிப்பு கொண்டவர்களாகப் பின்வருபவர்கள் உள்ளனர்: முதலிடம்: டாக்டர் சந்திர சேகர் பெம்மாசானி (தெலுங்கு தேசம்) - ₹5,705 கோடி. இரண்டாமிடம்: கொண்டா விஸ்வேஷ்வர் ரெட்டி (பாஜக) - ₹4,568 கோடி. தற்போதுள்ள 541 உறுப்பினர்களில் 481 பேர் வழக்கம்போல சம்பளம் பெற்று வருகின்றனர். மீதமுள்ள உறுப்பினர்களின் சம்பள நிலை குறித்து ஆர்டிஐ பதிலில் தெளிவான விளக்கம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.