பயனாளர்களுக்கு அளித்த வந்த கட்டண வசதியான போஸ்ட் பிளஸ்ஸை நிறுத்தும் Tumblr
உலகளவில் பல்வேறு சமூக வலைத்தள சேவைகளுள் ஒன்றான தம்ளர் (Tumblr), டிசம்பர் 1ம் தேதி முதல் தங்களது சேவைகளில் சில மாற்றங்களை அமல்படுத்தவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தற்போது வரை அந்த சமூக வலைத்தளத்தில் உள்ளடக்கங்களை உருவாக்குபவர்கள், பிற பயனாளர்கள் அதனை அணுக சந்தா வகையில் குறிப்பிட்ட அளவு கட்டணத்தை வசூலிக்க முடிந்து வந்தது. இதற்காக போஸ்ட் பிளஸ் என்ற வசதியை தம்ளர் தங்கள் பயனாளர்களுக்கு அளித்து வந்தது. ஆனால், தொடர்ந்து அத்தளத்தின் பயனாளர் எண்ணிக்கை குறைந்து வருவது மற்றும் குறிப்பிட்ட வருவாய் இலக்குகளை எட்ட முடியாததன் காரணமாக அந்த போஸ்ட் பிளஸ் வசதியை தம்ளர் நிறுவனம் தங்கள் தளத்தில் இருந்து நீக்கவிருக்கிறது.
இனி அடிப்படை செயல்பாடுகள் மட்டுமே:
உள்ளடக்கங்களை உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் விதமாக 2021ம் ஆண்டு இந்த போஸ்ட் பிளஸ் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம். ஆனால், அந்நிறுவனம் நினைத்தபடி இந்த வசதியின் அறிமுகம் நேர்மறையான தாக்கங்களைக் கொடுக்கவில்லை. எனவே தற்போது அந்த வசதியினை நிறுத்திவிட்டு, அடிப்படை செயல்பாடுகளுக்கு திரும்பவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் தம்ளரின் தாய் நிறுவனமான ஆட்டோமேட்டிக்கின் சிஇஓ மேட் முல்லன்வெக். தற்போது இருக்கும் போஸ்ட் பிளஸ் உள்ளடக்கங்களை இந்த 2023 இறுதி வரை பயனாளர்களால் அணுக முடியும் எனவும், அதன் பின்பு அதனை பிரைவேட் என மார்க் செய்யவும் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம். தற்போது உலகளவில் 135 மில்லியன் மாதாந்திர பயனாளர்களை தம்ளர் தளம் கொண்டிருந்தாலும், அதன் பெரும்பான்மையான பயனாளர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.