
4ஜி 5ஜியையெல்லாம் விடுங்க; இந்த நாட்டுல இன்னும் 2ஜி தான் பயன்படுத்திக்கிட்டு இருக்காங்களாம்; ஆச்சரிய தகவல்
செய்தி முன்னோட்டம்
5ஜி அறிமுகப்படுத்தப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும், உலகம் 6ஜி இணைப்பை எதிர்நோக்கியுள்ள நிலையில், இன்னும் 2ஜியை மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தும் ஒரு நாடு உலகத்தில் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறாதா? உண்மைதான். வட கொரியா இறுக்கமாக கட்டுப்படுத்தப்பட்ட டிஜிட்டல் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. அங்கு பெரும்பாலான மக்கள் 2ஜி அல்லது 3ஜி நெட்வொர்க்குகளை மட்டுமே பயன்படுத்துகின்றனர் மற்றும் உலகளாவிய இன்டர்நெட்டை அணுக முடியாது. 2023 WIRED அறிக்கையின்படி, நாட்டின் மக்கள் தொகை டிஜிட்டல் தகவல்தொடர்பு அடிப்படையில் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்க உயரடுக்கின் ஒரு சிறிய குழுவிற்கு மட்டுமே உலகளாவிய இன்டர்நெட்டை அணுக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குவாங்மியோங்
குவாங்மியோங் இன்ட்ராநெட்
சாதாரண வட கொரியர்கள் குவாங்மியோங் எனப்படும் அரசு நடத்தும் இன்ட்ராநெட்டில் மட்டுமே உள்ளனர், இது அதிகாரிகளால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது. ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துபவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்றே அங்கு பார்க்கப்படுகிறார்கள். ஆட்சி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பதை நிரூபிக்க, மணிநேர ஸ்கிரீன் ஷாட்களை அரசாங்கத்திற்கு அவர்கள் அனுப்ப வேண்டும். கண்காணிப்பு டிஜிட்டல் தகவல்தொடர்புகளுக்கு அப்பால், மக்களின் ஃபேஷன் தேர்வுகள் மற்றும் வாழ்க்கை முறைகளும் ஆராயப்படுகின்றன.
2ஜி
2ஜி தொலைபேசிகள்
ஸ்மார்ட்போன் பயன்பாடு அரிதானது. மேலும் பெரும்பாலான மக்கள் இன்னும் காலாவதியான 2ஜி பட்டன் போன்களைப் பயன்படுத்துகின்றனர். இணையப் பயன்பாடு கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, வெளிநாட்டு வலைதளங்கள், சமூக ஊடக தளங்கள் மற்றும் சர்வதேச செய்திகளுக்கான அணுகல் முற்றிலுமாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு வானொலியைக் கேட்பது கூட கடுமையான தண்டனைக்கு வழிவகுக்கும். நாட்டின் தணிக்கை அமைப்பு, கடுமையான கருத்தியல் கட்டுப்பாட்டைப் பேணுகையில், அதன் குடிமக்களை உலகளாவிய தகவல் ஓட்டங்களிலிருந்து தனிமைப்படுத்த உதவுகிறது. ஒருபுறம் மக்களுக்கு கட்டுப்பாடுகள் இருந்தாலும், வட கொரியா அரசு ஆதரவுடன் செய்யப்படும் ஹேக்கிங் நடவடிக்கைகள் உட்பட அதன் வளர்ந்து வரும் சைபர் திறன்கள் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.