சர்வதேச மாடல்களை விட 5.5 மடங்கு குறைவான கட்டணம்! இந்தியாவில் உருவாகும் 1 டிரில்லியன் பாராமீட்டர் AI மாடல்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவை சேர்ந்த முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான சர்வம் (Sarvam), 1 டிரில்லியன் பாராமீட்டர்களுக்கு (1 Trillion-plus Parameters) மேலான மிகப்பெரிய அடிப்படை ஏஐ மாடலை (Foundational Model) இந்தியாவில் உருவாக்கி வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற ஈபாக் (Epoch) நிகழ்வில் பேசிய நிறுவனத்தின் இணை நிறுவனர் பிரத்யுஷ் குமார், கோடிங், சைபர் பாதுகாப்பு, அறிவியல் ஆராய்ச்சிகள் மற்றும் சிமுலேஷன் பணிகளுக்காக இந்த மாடல் இந்தியாவிலேயே முற்றிலும் புதிதாக உருவாக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
குறைந்த கட்டணம்
சர்வதேச நிறுவனங்களை விட 5.5 மடங்கு குறைந்த கட்டணம்
சர்வவாம் தனது சர்வம் 105B (Sarvam 105B) மாடலுக்கான கட்டண விவரங்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி, 1 மில்லியன் பிளெண்டட் டோக்கன்களுக்கு (Million blended tokens) $0.80 மட்டுமே கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது ஓபன்ஏஐ நிறுவனத்தின் 'GPT-5.4 Mini' மாடலின் ($4.50) கட்டணத்தை விட 5.5 மடங்கு குறைவாகும்.
மேலும் கூகுளின் 'Gemini 3.5 Flash' ($9) மாடலை விட 11 மடங்கு குறைவான கட்டணத்தில் இந்தச் சேவை வழங்கப்படுகிறது.
இந்தியா
இந்தியாவில் ஹோஸ்ட் செய்யப்படும் குறைந்த செலவு ஏஐ
இந்த ஏஐ மாடல்கள் முற்றிலும் இந்தியாவிலேயே ஹோஸ்ட் செய்யப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன.
குரல் சார்ந்த ஏஐ (Voice AI) பயன்பாடுகளில் நாள்தோறும் கோடிக்கணக்கான நிமிடங்களை இத்தளம் வெற்றிகரமாகக் கையாண்டு வருகிறது.
"இன்றைய சூழலில் குரல் சார்ந்த ஏஐ தயாரிப்புகளை உருவாக்க சர்வம் தளமே மிகவும் மலிவான, வேகமான மற்றும் எளிதில் விரிவாக்கக்கூடிய தீர்வாகும்." என நிறுவனம் உறுதியளித்துள்ளது.
செயல்திறன்
பெரிய மாடல்களுக்கு நிகரான செயல்திறன்
அளவால் சிறியதாக இருந்தாலும், சர்வம் 105B மாடலானது மிகப்பெரிய மாடல்களுக்கு இணையான செயல்திறனை வெளிப்படுத்துகிறது.
உதாரணத்திற்கு, 753 பில்லியன் பாராமீட்டர்களைக் கொண்ட 'GLM 5.2' மாடலுடன் ஒப்பிடும்போது, நிறுவனங்களுக்கான டூல் பயன்பாடு, நிலைத்தன்மை மற்றும் செயல்முறைகளை நிறைவேற்றுவதில் சர்வவாம் மாடல் அதற்கு நிகரான சிறப்பான முடிவுகளையே வழங்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணி
'சர்வம் விஷன் எட்ஜ்' மற்றும் ஒடிசா அரசுடன் கூட்டணி
மொழி மாடல்கள் தவிர, ஆவணங்களை டிஜிட்டல் முறையில் ஆய்வு செய்யும் 'சர்வம் விஷன் எட்ஜ்' (Sarvam Vision Edge) என்ற தளத்தையும் சர்வம் வணிக ரீதியாக அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநில அரசுடன் இணைந்து அங்குள்ள நிலப் பதிவேடுகளை டிஜிட்டல் முறைக்கு மாற்றி, அதிலிருந்து தகவல்களை துல்லியமாகப் பிரித்தெடுக்க இந்த விஷன் மாடல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் 'சர்வம் விஷன் 2.0' மூலம் கைப்பட எழுதப்பட்ட ஆவணங்களைப் படிக்கும் (OCR) திறனும் அதிகரிக்கப்பட்டுள்ளது.