இன்று பூமியை கடந்து செல்லும் 'வீடு சைஸ்' விண்கல்; பூமிக்கு ஆபத்தா?
செய்தி முன்னோட்டம்
நாசா, இன்று பூமிக்கு மிக அருகே கடந்து செல்லும் '2026 HZ1' என்ற விண்கல்லை தீவிரமாக கண்காணித்து வருகிறது. ஒரு சிறிய வீட்டின் அளவிலான இந்த விண்கல், விண்வெளி ஆர்வலர்களிடையே கவனத்தை பெற்றுள்ளது. 2026 HZ1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல் சுமார் 54 அடி அகலம் கொண்டது. இது பூமியை நோக்கி மணிக்கு ஆயிரக்கணக்கான மைல்கள் வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தாலும், இதனால் பூமிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த விண்கல் பூமியிலிருந்து சுமார் 3.3 மில்லியன் மைல்கள் தொலைவில் கடந்து செல்லும். இது பூமிக்கும், நிலவுக்கும் இடைப்பட்ட தூரத்தை விட சுமார் 14 மடங்கு அதிக தொலைவாகும். எனவே, இது பூமியின் மீது மோதுவதற்கான வாய்ப்பு இல்லை.
கண்காணிப்பு
ஏன் இந்த கண்காணிப்பு முக்கியம்?
நாசா போன்ற விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் இத்தகைய விண்கற்களைத் தொடர்ந்து கண்காணிப்பதற்குக் கீழ்க்கண்ட காரணங்கள் உள்ளன. பூமியின் சுற்றுவட்டப்பாதைக்கு அருகே வரும் பொருட்களை (Near-Earth Objects) முன்கூட்டியே கண்டறிந்து ஆபத்துகளை தவிர்க்க இது உதவுகிறது. இந்த விண்கற்கள் எதனால் ஆனவை மற்றும் அவற்றின் இயக்கம் எவ்வாறு உள்ளது என்பதைப் புரிந்துகொள்வது, எதிர்காலத்தில் ஏதேனும் உண்மையான அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதைத் தடுக்க உதவும். சூரிய குடும்பத்தின் தோற்றம் குறித்த பல ரகசியங்களை இந்த விண்வெளிப் பாறைகள் தங்களுக்குள் கொண்டுள்ளன. ஏற்கனவே இந்த மாதம் 2026 GD மற்றும் 2026 HJ1 போன்ற சிறிய விண்கற்கள் பூமியைக் கடந்து சென்றுள்ள நிலையில், 2026 HZ1 விண்கல்லும் இன்று எவ்வித சேதமுமின்றி பாதுகாப்பாகக் கடந்து செல்லும்.