ககன்யான் திட்டத்தின் முதல் சோதனை ஓட்டம் வெற்றி
வரும் 2025 ஆம் ஆண்டு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின், முதல் சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நடத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில், முதலில் காலை 8 மணி அளவில் சோதனை நடைபெறுவதாக இருந்தது. பின்னர் வானிலை மற்றும் தொழில்நுட்ப காரணங்களுக்காக, சோதனை காலை 10 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ககன்யான் ஏவுகணையில் மனிதர்களை அனுப்பும் போது, எதிர்பாராத விபத்துகள் ஏற்பட்டால், அவர்களை பத்திரமாக தரையிறக்கும் 'கிரேவ் எஸ்கேப் சிஸ்டம்' நடைமுறையை தற்போது இஸ்ரோ வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. ஆளில்லாமல் நடைபெற்ற இச்சோதனையில், ஜி.எஸ்.எல்.வி எம்.கே III ஏவுகணை பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வெற்றிகரமாக கடலில் இறங்கிய பாராசூட்
ககன்யான் ஏவுகணையில் மனிதர்கள் அமர்ந்திருக்கும் பகுதியான குப்பியை(Capsule) குறிப்பிட்ட உயரத்தில் ஏவுகணையில் இருந்து பிரிக்கப்பட்டு, பாராசூட் மூலமாக கடலில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பாராசூட் வங்கக்கடலில் குறிப்பிட்ட பகுதியில், குறிப்பிட்ட வேகத்தில் தரையிறங்கியதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். தற்போது அந்த குப்பியை கடற்படை உதவியுடன் எடுத்து வந்து சோதனை செய்யப்படும் என அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் 'கிரேவ் எஸ்கேப் சிஸ்டம்' திட்டமிட்டபடி செயல்பட்டதாகவும் இஸ்ரோ தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக இதே சோதனையை மனிதர்களுடன் இஸ்ரோ செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.