LOADING...
யூசர்நேம் அம்சத்தால் புதிய ஆபத்து? வாட்ஸ்அப்பை அடுத்து டெலிகிராம், சிக்னல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி
பாதுகாப்பு தன்மைகள் குறித்து விளக்கம் கேட்டு விரைவில் நோட்டீஸ் அனுப்ப மத்திய அரசு திட்டம்

யூசர்நேம் அம்சத்தால் புதிய ஆபத்து? வாட்ஸ்அப்பை அடுத்து டெலிகிராம், சிக்னல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி

எழுதியவர் Venkatalakshmi V
Jul 02, 2026
05:59 pm

செய்தி முன்னோட்டம்

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய 'யூசர்நேம்' அம்சத்திற்குத் தடை விதித்து நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து, தற்போது தனது கவனத்தை டெலிகிராம் மற்றும் சிக்னல் ஆகிய குறுஞ்செய்தி செயலிகளின் பக்கம் திருப்பியுள்ளது. இந்த செயலிகளில் உள்ள யூசர்நேம் வசதிகள் மற்றும் அவற்றின் பாதுகாப்பு தன்மைகள் குறித்து விளக்கம் கேட்டு விரைவில் நோட்டீஸ் அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டுள்ளது.

கிடுக்கிப்பிடி

மத்திய அரசின் புதிய கிடுக்கிப்பிடி

அரசு வட்டாரங்களின்படி, டெலிகிராம் மற்றும் சிக்னல் செயலிகளில் தனிநபர்களை அடையாளம் காண்பதில் உள்ள பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் இந்த அம்சங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான விளக்கத்தை அமைச்சகம் கோரவுள்ளது. முன்னதாக, மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலிக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸில், பயனர் தனியுரிமை என்ற பெயரில் கொண்டு வரப்படும் இந்த அம்சம், ஆன்லைன் மோசடிகளை பெருமளவில் அதிகரிக்கும் என அரசு கவலை தெரிவித்தது.

சைபர் குற்றங்கள்

சைபர் குற்றங்கள் அதிகரிக்கும் என்ற அச்சம்

தொலைபேசி எண்கள் இல்லாமல் வெறும் யூசர்நேம்களை மட்டும் பயன்படுத்தி குறுஞ்செய்தி அனுப்பும் இந்த புதிய அம்சம், டிஜிட்டல் அரெஸ்ட், ஃபிஷிங் மற்றும் ஆள்மாறாட்ட மோசடிகளுக்கு வழிவகுக்கும் என சைபர் பாதுகாப்பு நிபுணர்களும், 'Paytm' நிறுவனர் விஜய் சேகர் சர்மா போன்ற தொழிலதிபர்களும் எச்சரித்துள்ளனர். பிரபலங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பெயர்களைப் போன்றே போலி யூசர்நேம்களை உருவாக்கிப் பொதுமக்களை ஏமாற்ற சைபர் குற்றவாளிகள் இதனை ஒரு கருவியாகப் பயன்படுத்தக்கூடும் என மத்திய அரசு அஞ்சுகிறது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் ஐடி விதிகள் 2021-ன் படி, சமூக ஊடக இடைத்தரகர்கள் நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்யக் கடமைப்பட்டவர்கள் ஆவர். இதைக் சுட்டிக்காட்டி, முறையான ஆவணங்களுடன் 3 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement