LOADING...
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா அதிவேகமாக மூழ்குவது ஏன்? வெனிஸை விட மோசமான அபாயம்!
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா அதிவேகமாக மூழ்குவதாக எச்சரிக்கை

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா அதிவேகமாக மூழ்குவது ஏன்? வெனிஸை விட மோசமான அபாயம்!

எழுதியவர் Sekar Chinnappan
Dec 12, 2025
04:53 pm

செய்தி முன்னோட்டம்

இந்தோனேசியாவின் மிகப் பெரிய நகரமும், தலைநகரமுமான ஜகார்த்தா அபாயகரமான வேகத்தில் நிலத்தில் புதைந்து வருவதாகப் புதிய அறிக்கைகள் எச்சரிக்கின்றன. எதிர்காலத்தில் கடுமையான 'நிலத்தில் புதைவு' (subsidence) அபாயங்களை இந்த நகரம் எதிர்கொண்டுள்ளது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, தலைநகரின் சில பகுதிகள் விரைவில் கடலுக்குள் காணாமல் போகலாம். ஜகார்த்தா, ஒவ்வொரு ஆண்டும் 1 செமீ முதல் 15 செமீ வரை நிலத்தில் புதைகிறது. இது, ஆண்டுக்கு சுமார் 0.08 அங்குலங்கள் மட்டுமே புதையும் வெனிஸ் நகரத்தின் வீதத்தை விடப் பல மடங்கு அதிகம். தற்போது, ஜகார்த்தாவின் சுமார் 40% பகுதி கடலின் மட்டத்திற்குக் கீழே உள்ளது.

காரணம்

ஜகார்த்தா வேகமாக மூழ்கக் காரணங்கள் என்ன?

ஜகார்த்தா இந்த அளவிற்கு விரைவாக மூழ்கி வருவதற்குக் காரணம், மனித நடவடிக்கைகளே என்று வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நகர்ப்புற மக்களும், வணிக நிறுவனங்களும் தொடர்ந்து நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சுவதால், பூமிக்கு அடியில் உள்ள நீர்வள ஆதாரங்கள் வற்றிப் போகின்றன. நீர் இருப்பு கணிசமாகக் குறையும் போது, கீழே உள்ள மண் சுருங்கி, பலவீனமான டெல்டா நிலப்பகுதி தொடர்ச்சியான அழுத்தத்தின் கீழ் சரியத் தொடங்குகிறது. பெரிய கட்டிடங்கள் மற்றும் சாலைகளின் எடை, நிலையற்ற மேற்பரப்பில் அழுத்தம் கொடுப்பதால் மண் மேலும் சிதைவடைகிறது. நிலம் உள்நோக்கிப் புதைவதுடன் (coastal subsidence), கடல் மட்டம் உயருவதும் இணைந்து வெள்ள அபாயத்தை அதிகரிக்கிறது. வல்லுநர்களின் கூற்றுப்படி, 2030 ஆம் ஆண்டுக்குள் இந்நகரம் பெரும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடலாம்.

தீர்வு

ஜகார்த்தாவின் எதிர்காலமும் தீர்க்கும் முயற்சிகளும்

பல மாவட்டங்கள் நிரந்தரமாக வெள்ளத்தில் மூழ்கும் என்றும், அதிக அலைகள் கடல் நீரை மிக எளிதாக உள்நாட்டிற்குள் தள்ளும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். சாலைகள், வீடுகள் மற்றும் வடிகால் அமைப்புகள் தொடர்ச்சியான பாதிப்புக்குள்ளாகும். இதனால் குடியிருக்கத் தகுதியற்ற நிலப்பரப்புகள் குறையலாம். கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில், ஏற்கனவேப் பெரிய அளவிலான மக்கள் இடம்பெயர்வு மற்றும் மறு குடியமர்வு பற்றிய பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன. கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், புதையும் பகுதிகளில் இருந்து வளர்ச்சிகளை வேறு திசைக்கு மாற்றுதல் மற்றும் நிலத்தடி நீர் உறிஞ்சும் நடைமுறைகள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது ஆகியவை குறித்து அதிகாரிகள் அவசரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

Advertisement

பாடம்

பிற நகரங்களுக்கான பாடம்

ஜகார்த்தாவின் நெருக்கடி உலகளாவிய ஒரு பிரச்சினையைப் பிரதிபலிக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இன்று கடல் மட்டங்கள் உயர்வதை விடப் பல கடலோர நகரங்கள் வேகமாக மூழ்கி வருகின்றன. ஆசியாவில் ஆண்டுதோறும் 2 செமீக்கு மேல் நிலம் புதையும் வீதம் காணப்படுகிறது. இது உலகளாவிய கடல் மட்டம் உயர்வதை விடப் கிட்டத்தட்டப் பத்து மடங்கு அதிகம். எனவே, நீடித்த நீர் பயன்பாட்டுடன் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் திட்டமிடுபவர்கள் எச்சரிக்கின்றனர்.

Advertisement