சிங்கப்பூரின் செயற்கைக் கோள்களை சுமந்து நாளை விண்ணில் ஏவப்படவிருக்கிறது PSLV
சொந்த தேவைகளுக்கான செயற்கை கோள்களை மட்டுமின்றி, வணிக நோக்கத்துடன் பிற நாடுகளின் செயற்கை கோள்களையும் நம்முடைய ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்தும் சேவையை வழங்கி வருகிறது இஸ்ரோ. தற்போது சிங்கப்பூரின் ஏழு செயற்கைக் கோள்களை நாளை காலை PSLV ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தத் திட்டமிட்டிருக்கிறது இஸ்ரோ. இந்த ராக்கெட் ஏவலுக்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை ஐந்து மணிக்குத் தொடங்கியது. சிங்கப்பூரின் முதன்மையான DS-SAR செயற்கைக் கோளுடன், ஆறு கூடுதல் செயற்கைக் கோள்களும் இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணிக்கு ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிக்கோட்டை ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படவிருக்கின்றன.
ஏவல் திட்டம் என்ன?
சிங்கப்பூரின் செயற்கைக் கோள்களை நாளை விண்ணுக்கு எடுத்துச் செல்லவிருக்கும் இந்தியாவின் PSLC-C56 ராக்கெட்டுக்கு, இது 58வது ஏவலாகும். இந்த PSLC-C56 ராக்கெட்டானது 44.4மீ உயரத்துடன், நான்கு நிலைகளைக் கொண்டிருக்கிறது. கூடுதல் பூஸ்டர்கள் எதுவுமின்றி, முதன்மையான ராக்கெட்டை மட்டுமே கொண்டு இந்த ஏவல் திட்டமிடப்பட்டிருக்கிறது. இது போல கூடுதல் பூஸ்டர்களின்றி ஏவப்படுவது இது 17வது முறையாகும். காலை 6.30 மணியில் ஏவப்படுவதில் இருந்து 25 நிமிடங்களில் மொத்த செயல்பாடுகளும் திட்டமிடப்பட்டிருக்கின்றன. பூமியில் இருந்து 535 கிமீ உயர சுற்றுவட்டப் பாதையில் இந்த செயற்கைக் கோள்கள் நிலைநிறுத்தத் திட்டமிடப்பட்டிருக்கின்றன. விண்ணில் ஏவப்பட்டு 21வது நிமிடத்தில் 4வது நிலை பிரிந்த பின்பு, 4 நிமிட இடைவெளியில் 7 செயற்கைக் கோள்களும் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்படவிருக்கின்றன.