இனி அனைத்து மொபைல்களிலும் இந்த ஆப் கட்டாயம்; மத்திய அரசு அதிரடி உத்தரவு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் சைபர் பாதுகாப்பு மற்றும் ஐஎம்இஐ (IMEI) திருட்டு போன்ற மோசடிகளைத் தடுக்கும் நோக்கில், புதிதாக விற்பனைக்கு வரும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் சஞ்சார் சாதி (Sanchar Saathi) என்ற அரசு செயலியை முன் கூட்டியே நிறுவுமாறு (Pre-install) மொபைல் உற்பத்தியாளர்களுக்குத் தொலைத்தொடர்புத் துறை (DoT) உத்தரவிட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள இந்தச் சமீபத்திய உத்தரவு, விநியோகச் சங்கிலியில் (Supply Chain) உள்ள சாதனங்களுக்கும் பொருந்தும். புதிய சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், அடுத்த 90 நாட்களுக்குள் இந்தச் செயலியைத் தங்கள் போன்களில் நிறுவியிருக்க வேண்டும். மேலும், ஏற்கனவே சந்தையில் உள்ள சாதனங்களுக்கு மென்பொருள் புதுப்பித்தல் (Software Updates) மூலம் இந்தச் செயலியைப் பயனர்களுக்கு வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நோக்கம்
ஐஎம்இஐ திருட்டைத் தடுக்கும் நோக்கம்
ஒவ்வொரு மொபைல் சாதனத்திற்கும் தனித்துவமான 14 முதல் 17 இலக்க எண்ணான ஐஎம்இஐயைத் திருடுவது அல்லது போலியாக உருவாக்குவது போன்ற செயல்கள் மோசடி மற்றும் நெட்வொர்க் தவறான பயன்பாட்டிற்கு வழிவகுக்கிறது. திருடப்பட்ட தொலைபேசிகளைக் கண்காணிக்கவும் தடுக்கவும் இந்த ஐஎம்இஐ எண்கள் உதவுகின்றன. இந்த மோசடிகளைத் தடுக்கவே மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. சஞ்சார் சாதி செயலி மூலம், பயனர்கள் சந்தேகத்திற்கிடமான அழைப்புகளைப் புகாரளிக்கலாம், ஐஎம்இஐ எண்களைச் சரிபார்க்கலாம் மற்றும் திருடப்பட்ட சாதனங்களைக் கண்டுபிடிக்கலாம். ஐஎம்இஐயைத் திருத்தும் நபர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ₹50 லட்சம் வரை அபராதம் விதிக்கவும், புதிய தொலைத்தொடர்புச் சட்டம், 2023இல் கடுமையான விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை, நாட்டில் சைபர் பாதுகாப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.