ஆகஸ்ட் 12ல் ஒரே நாளில் 4 அரிதான விண்வெளி அதிசயங்கள்: முழு விபரம்
செய்தி முன்னோட்டம்
உலகெங்கிலும் உள்ள விண்வெளி ஆர்வலர்களுக்கு வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஒரு மறக்க முடியாத நாளாக அமையவுள்ளது. ஒரே நாளில் 24 மணி நேர கால இடைவெளியில் 4 வெவ்வேறான அரிதான வானியல் நிகழ்வுகள் அடுத்தடுத்து நிகழவுள்ளன. ஒவ்வொன்றும் தனித்தனியாகத் குறிப்பிட்ட கால இடைவெளியில் நிகழ்ந்தாலும், இந்த நான்கு நிகழ்வுகளும் ஒரே நாளில் இணைந்து வருவது வானியல் வரலாற்றில் மிகவும் அபூர்வமான ஒன்றாகக் கருதப்படுகிறது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
கோள்கள்
6 கோள்களின் அணிவகுப்பு
ஆகஸ்ட் 12 அன்று சூரிய உதயத்திற்கு முன்பாக, வியாழன், புதன், செவ்வாய், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய ஆறு கோள்களும் வானில் கிழக்கு முதல் மேற்கு வரை ஒரே நேர்கோட்டில் வரிசையாகக் காட்சியளிக்கும் கோள்களின் அணிவகுப்பு (Six-planet parade) நிகழவுள்ளது.
இதில் செவ்வாய் மற்றும் சனி கோள்களை வெறும் கண்ணால் பார்க்க முடியும் என்றும், யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கோள்களைத் தொலைநோக்கி மூலம் தெளிவாகக் காண முடியும் என்றும் வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சூரிய கிரகணம்
பூரண சூரிய கிரகணமும் இந்தியாவில் பார்க்க முடியாத சூழலும்
அன்று பகல் நேரத்தில், நிலவு சூரியனுக்கும் பூமிக்கும் இடையே கடந்து செல்லும் பூர்ண சூரிய கிரகணம் நிகழவுள்ளது.
கிரீன்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பகல் நேரமே இரவாக மாறும் அளவுக்கு இந்த முழு சூரிய கிரகணத்தைக் காண முடியும்.
இந்திய நேரப்படி இரவில் (இரவு 9:45 முதல் அதிகாலை 2:15 வரை) இது நிகழ்வதாலும், சூரியன் அடிவானத்திற்கு கீழே இருப்பதாலும் இந்தியாவில் இதனைப் பார்க்க முடியாது.
விண்கல் மழை
அமாவாசை நிலவும் பெர்சீட் விண்கல் மழையின் உச்சமும்
சூரிய கிரகணம் நிகழும் அதே நாளில் நிலவு தனது முழுமையான அமாவாசை கட்டத்தை எட்டுவதால், இரவு வானம் முற்றிலும் இருண்டு காணப்படும்.
இந்த இருண்ட வானம் ஆண்டின் சிறந்த பெர்சீட் விண்கல் மழை (Perseid Meteor Shower) நிகழ்வுக்கு மிகச் சிறந்த பின்னணியை அமைத்துக் கொடுக்கிறது.
நிலவொளி இல்லாததால், ஆகஸ்ட் 12, 13 மற்றும் 14 ஆம் தேதிகளின் அதிகாலை வேளையில் மணிக்கு 100 விண்கற்கள் வரை எரியும் அற்புதக் காட்சியைப் தெளிவுறக் காண முடியும்.