புரட்டாசி ஸ்பெஷல்: மட்டன் பிரியாணிக்கு பதிலாக இந்த பலாக்காய் புலாவ் செய்து பார்க்கலாமே..!
புரட்டாசி மாதத்தில், அசைவம் சாப்பிட முடியாமல் தவிப்பவர்களுக்காகவே, மட்டன் சுவையில் அருமையான பலாக்காய் புலாவ் செய்வது எப்படி என்பதை நாங்கள் இங்கே தந்துள்ளோம்! தமிழ்நாட்டின் முக்கனிகளில், பலாப்பழத்துக்கு இருக்கும் மவுசு என்றைக்கும் குறைந்ததில்லை. பழம் மற்றும் காய்கறி வகைகளில் ஒன்றாகக் கருதப்பட்ட பலா, பழமாக மட்டுமின்றி, காயாகவும் சமையலுக்கு உகந்தது. அதில் உடலுக்கு தேவையான சத்துகள் நிரம்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பலாக்காய்களில் இயற்கையான நல்ல கொழுப்புச் சத்துகள் உள்ளன. பீட்டா கரோட்டின் என்று சொல்லப்படும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி மிகுந்த அளவில் இருக்கிறது. ரத்த அழுத்தத்தை உடனே கட்டுப்படுத்தக்கூடிய பொட்டாஷியம் இதில் நிறைந்திருக்கிறது. மேலும், புரதம், கார்போஹைட்ரேட், மெக்னீஷியம், மாங்கனீஸ் போன்ற தாதுப் பொருள்களும் பலாக்காய்களில் உள்ளன.
தேவையான பொருள்கள்:
பலாக்காய் பொரிக்க: பலாக்காய் - 1/4 கிலோ மஞ்சள் தூள்-1 டீஸ்பூன் உப்பு-1 டீஸ்பூன் தயிர்-1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு சாதத்துக்கு: பாசுமதி அரிசி - 2 கப் தண்ணீர் - 4 கப் தாளிக்க: எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் ஷாஜீரா - 2 டீஸ்பூன் ஏலக்காய், பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை - தலா 4 வதக்குவதற்கு: நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 நீளமாகக் கீறிய பச்சை மிளகாய் - 2 இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
செய்முறை:
பலாக்காயின் தோலை நீக்கி, உள்ளிருக்கும் காய் பகுதியை சிறிய துண்டுகளாக வெட்டி, சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள், தயிர் மற்றும் மிளகாய்ப்பொடி கலந்து எண்ணெயில் பொரித்தெடுத்து வைத்துக்கொள்ளவும். தாளிப்புப் பொருள்களைச் சேர்த்து நன்கு வறுத்த பிறகு, கழுவி ஊறவைத்த அரிசியைச் சேர்க்கவும். அரிசியை வறுக்கும்போது அதன் நிறம் மாறக்கூடாது. 5 நிமிடங்கள் வறுத்த பிறகு, இரு மடங்கு தண்ணீர் சேர்த்து அதனோடு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து வேக வைக்கவும்.
செய்முறை:
ஒரு கடையில், சூடான எண்ணெயில் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி - பூண்டு விழுதைச் சேர்த்து நன்கு வதக்கிய பிறகு, ஊற வைத்துப் பொரித்த பலாக்காய்களையும் சேர்த்துக்கொள்ளவும். ஏற்கெனவே எண்ணெயில் வறுத்தெடுத்ததால் சிறிது நேரம் வதங்கினாலே போதுமானது. பலாக்காய் மசாலா தயாரானதும், வேகவைத்த சாதத்தைச் சேர்த்தால் சுவையான பலாக்காய் புலாவ் ரெடி. பரிமாறுவதற்கு முன், காற்று புகாத பாத்திரத்தில் இந்தக் கலவையைக் கொட்டி 10 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து இறக்கினால், தம் பிரியாணியின் சுவை கிடைக்கும்.