இனி பதுக்கினால் சிறை! எல்பிஜி தட்டுப்பாட்டைச் சமாளிக்க மத்திய அரசு எடுத்த பிரம்மாஸ்திரம்; அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் சொல்வது என்ன?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைச் சமாளிக்கவும், சீரான விநியோகத்தை உறுதி செய்யவும் மத்திய அரசு அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், 1955 ஐ செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) அன்று அமல்படுத்தியுள்ளது. இந்தச் சட்டம் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது மற்றும் இதனால் பொதுமக்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
சட்டம்
அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் என்றால் என்ன?
பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் (உணவு, மருந்து, எரிபொருள், உரம் போன்றவை) விநியோகம் தடைபடும்போது இந்தச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது. பொருட்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும், தடையின்றி விநியோகம் செய்யவும், கள்ளச்சந்தையில் விற்கப்படுவதைத் தடுக்கவும் இந்தச் சட்டம் அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.
அதிகாரங்கள்
இந்தச் சட்டத்தின் மூலம் அரசுக்குக் கிடைக்கும் அதிகாரங்கள் என்ன?
இந்தச் சட்டத்தின் பிரிவு 3இன் கீழ், மத்திய அரசுக்குக் கீழ்க்கண்ட அதீத அதிகாரங்கள் கிடைக்கின்றன. ஒரு பொருளின் உற்பத்தியை அதிகரிக்கவோ அல்லது முறைப்படுத்தவோ நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிடலாம். மாநிலங்களுக்கு இடையே பொருட்கள் எவ்வாறு கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதை அரசு தீர்மானிக்கும். பொருட்களின் விலையை நிர்ணயிக்கலாம் அல்லது ஒரு குறிப்பிட்ட விலைக்கு மேல் விற்கக் கூடாது என உச்சவரம்பு விதிக்கலாம். வியாபாரிகள் அல்லது மொத்த விற்பனையாளர்கள் எவ்வளவு பொருட்களை இருப்பு வைக்கலாம் என்பதற்கான எல்லையை நிர்ணயிக்கலாம்.
சட்ட அமலாக்கம்
இப்போது இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது ஏன்?
இந்தியாவின் எல்பிஜி தேவையில் 80% ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே இறக்குமதி செய்யப்படுகிறது. பிப்ரவரி 28இல் ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் இந்தப் பாதை முடக்கப்பட்டுள்ளது. மும்பை, பெங்களூரு மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களில் வணிக சிலிண்டர்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் மூலம், கிடைக்கும் குறைந்த அளவு எரிவாயுவை வீடுகளுக்கான குழாய் எரிவாயு, போக்குவரத்து மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு முன்னுரிமை அளித்து வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
பாதிப்பு
ஹோட்டல் தொழில் பாதிப்பு
சென்னை, பெங்களூரு மற்றும் மும்பை ஹோட்டல் சங்கங்கள் ஏற்கனவே தட்டுப்பாடு காரணமாக உணவகங்களை மூடுவதாக அறிவித்துள்ளன. இந்தச் சூழலில், ஹோட்டல் போன்ற வணிகத் துறையினருக்கு எரிவாயு வழங்குவதை விட, 33 கோடி இந்தியக் குடும்பங்களுக்குத் தேவையான சமையல் எரிவாயுவை உறுதி செய்வதே அரசின் தற்போதைய இலக்காகும்.