உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து: இறுதிக்கட்டத்தை நெருங்கிய மீட்டுப்பணி, தயார் நிலையில் ஆம்புலன்ஸ்
கடந்த 12 நாட்களாக உத்திரகாசி சுரங்க பாதையின் இடிபாடுகளை நடுவே சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணிகள், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அவர்கள் இன்னும் சில மணித்துளிகளில் மீட்கப்பட உள்ளனர். இந்த மீட்புப்பணிகளை மேற்பார்வையிட உத்தரகண்ட் முதல்வரும், மீட்புப்பணி நடக்கும் இடத்திற்கு ஹெலிகாப்டரில் விரைந்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசியில் பிரம்மகால்-யமுனோத்ரி ஆகிய வழிபாடுதலங்களை இணைக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வந்தது. இந்த கட்டுமான பணியில் 41 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். கடந்த நவம்பர் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை, இந்த சுரங்கப் பாதையின் ஒரு பகுதியில் திடீர் மண் சரிவு ஏற்பட்டது. அதில் அந்த 41 தொழிலாளர்களும் இடிபாடுகளுக்கிடையே, வெளிவர முடியாமல் சிக்கிக் கொண்டனர்.
மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய அரசும், உத்தரகண்ட் மாநில அரசும்
இந்த இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு குழாய் மூலம் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. இவர்களை மீட்கும் பணியில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழு 12 நாளாக ஈடுபட்டு வருகிறது. இவர்களுடன் வெளிநாடுகளில் இருந்தும் நிபுணர்களும், உபகரணங்களும் வரவழைக்கப்பட்டு, பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவே, தொழிலாளர்கள் மீட்கப்பட்டுவிடுவார்கள் என எதிர்பார்த்திருந்த நிலையில், இடிபாடுகளை அகற்றும் போது, ஒரு இரும்பு கம்பி குறிக்கிட்டதாகவும், அதை மெஷின் கொண்டு அகற்றமுடியாமல் போகவே, NRDF மற்றும் நிபுணர்கள் அதை வெட்டி எடுக்கவேண்டி இருந்தது. அதனால் மீட்பு பணிகள் சற்று தாமதம் ஆனதாக கூறப்பட்டது.
தயார் நிலையில் மருத்துவ குழு
இந்த நிலையில், மொத்தம் உள்ள 57 மீட்டரில் 45 மீட்டர் தொலைவுக்கு துளையிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வெளியே வர வசதியாக, அந்த இடம் வரை கனமான குழாய்கள் இடிபாடுகளுக்கு இடையே இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுள்ளது. துளையிடும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உத்தர்காசியில் 41 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 30-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் உயிர்காக்கும் மருந்துகளும், மருத்துவ உபகரணங்களும் இன்று காலை மீட்பு இடத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது