
9 பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகங்களை அமைக்க உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையேயான கல்வி உறவுகளை வலுப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரிட்டன் பிரதமர் கீத் ஸ்டார்மர் ஆகியோர் இணைந்து 9 முன்னணி பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகங்களைத் திறக்க உள்ளதை அறிவித்துள்ளனர். இந்த முயற்சி, இந்தியாவின் புதிய தேசியக் கல்விக் கொள்கை 2020 மற்றும் இந்தியா-பிரிட்டன் விஷன் 2035 பாதை வரைபடத்திற்கு ஏற்க மேற்கொள்ளப்படுகிறது. இதன் முதல் கட்டமாக, சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் குருகிராம் வளாகம் ஏற்கனவே திறக்கப்பட்டு, முதல் தொகுதி மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், பிரிஸ்டல் பல்கலைக்கழகம் மும்பையில் தனது வளாகத்தைத் திறக்க பல்கலைக்கழக மானியக் குழுவிடம் ஒப்புதல் பெற்றுள்ளது. இது 2026 கோடையில் மாணவர்களை சேர்க்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்பந்தம்
பிரிட்டிஷ் பிரதமரின் இந்திய பயணத்தில் ஒப்பந்தம்
பிரதமர் கீத் ஸ்டார்மரின் முதல் அதிகாரப்பூர்வப் பயணத்தின் முக்கிய அம்சமாக இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது. வெளிநாடுகளுக்குச் செல்லாமல் உலகத் தரம் வாய்ந்த கல்வியை இந்திய மாணவர்கள் பெறுவதற்கும், கூட்டு ஆராய்ச்சி மற்றும் கல்வி-தொழில்துறை கூட்டாண்மைகளை ஊக்குவிப்பதற்கும் இந்த முயற்சி வழிவகுக்கும். வளாகங்களைத் திறக்கும் பட்டியலில் லிவர்பூல், யார்க் மற்றும் அபர்டீன் பல்கலைக்கழகங்களும் பெங்களூர் மற்றும் மும்பை போன்ற முக்கிய நகரங்களில் இணைய உள்ளன. இந்த நடவடிக்கை, இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் கல்வி உறவுகளை வலுப்படுத்தும் வியூகப் பங்களிப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.