பதவி உயர்வு, பணி இடமாற்றங்களுக்கு இனி முதல்வர் ஒப்புதல் பெற வேண்டும்: புதிய அரசாணை
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு அரசு பணிகளில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் தற்காலிக மற்றும் நிரந்தர பதவி உயர்வுகள், பணி இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் போன்ற முக்கிய முடிவுகளுக்கு இனி முதலமைச்சரின் நேரடி ஒப்புதலை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அலுவல் விதிகள் 1978-ன் விதி 35(4)-ன் கீழ், கடந்த 2022 முதல் 2025 வரை வெளியிடப்பட்ட அனைத்து நிலை ஆணைகளும், கடந்த ஜனவரி 9-ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலை ஆணை எண்-7-ம் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவற்றுக்கு பதிலாக பதவி உயர்வு, நியமனம், பணி இடமாற்றம், நிலம் கையகப்படுத்தல் மற்றும் நில மாற்றம் உள்ளிட்டவற்றுக்கு தலைமைச் செயலாளர் சாய்குமார் புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளார்.
அரசாணை
புதிய அரசாணையின் முக்கிய அம்சங்கள்
தலைமைச் செயலாளர் வெளியிட்ட உத்தரவின்படி, அதிகாரம் சார்ந்த வழிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
துறைத் தலைவர்கள், துறைத் தலைவர்களுக்கு அடுத்த நிலை அதிகாரிகள், மாவட்ட வருவாய் அலுவலர்கள் (DRO), கூடுதல் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆகியோரின் பதவி உயர்வு பட்டியல்கள் முதலமைச்சரின் நேரடி ஒப்புதலுக்கு அனுப்பப்பட வேண்டும்.
மற்ற மாநிலப் பணியாளர்களின் பதவி உயர்வுப் பட்டியல்களில் சம்பந்தப்பட்ட துறை, மனிதவள மேலாண்மைத் துறை மற்றும் நிதித்துறைக்கு இடையே எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லாத பட்சத்தில், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரின் ஒப்புதலே போதுமானதாகும்.
துறை ரீதியான கருத்து வேறுபாடுகள் ஏற்படும் சூழலில், கோப்புகள் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட வேண்டும்.
மூப்பு அடிப்படை
மூப்பு அடிப்படை மற்றும் நில நிர்வாகம்
மூப்பு அடிப்படையை மீறி வழங்கப்படும் சிறப்புப் பதவி உயர்வுகள் தொடர்பான கோப்புகள், தலைமைச் செயலாளர் தலைமையிலான உயர்மட்டக் குழுவின் பரிந்துரையுடன் முதலமைச்சரின் இறுதி ஒப்புதலுக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை அரசுத் துறைகளின் நிர்வாகச் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையையும் கட்டுப்பாட்டையும் அதிகரிக்கும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.