திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு 4,764 சிறப்புப் பேருந்துகள் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
உலகப் புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் விமர்சையாகக் கொண்டாடப்படும் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு, தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்களின் வசதிக்காக 4,764 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்தத் திருவிழாவிற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர், போக்குவரத்துத் துறையினருடன் ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த சிறப்புப் பேருந்துகள் சென்னை, விழுப்புரம், வேலூர், சேலம், கோவை, மதுரை, திருச்சி, கடலூர், புதுச்சேரி மற்றும் பெங்களூரு உள்ளிட்ட தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து இயக்கப்பட உள்ளன.
பேருந்து நிலையங்கள்
9 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பு
திருவண்ணாமலை நகரத்திற்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், வட்டாரப் போக்குவரத்துத் துறை மூலம் தற்காலிகமாக 9 பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும், இந்தத் தற்காலிகப் பேருந்து நிலையங்களிலிருந்து கிரிவலப் பாதைக்கு பக்தர்கள் சென்று வர வசதியாக, 70 கட்டணமில்லா சிற்றுந்துகளும் இயக்கப்பட உள்ளன. இந்த ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்குக் கோயில் கருவறையில் பரணி தீபம் ஏற்றப்பட்டு, மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.