25 நாட்கள் தலைமறைவு.. கடைசியில் சிக்கிய TCS நிதா கான்
செய்தி முன்னோட்டம்
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தின் நாசிக் கிளை தொடர்பான பாலியல் துன்புறுத்தல் மற்றும் மதமாற்றப் புகார் வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் நிதா கான், 25 நாட்கள் தலைமறைவுக்குப் பிறகு சத்ரபதி சம்பாஜி நகரில் வைத்து போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் நாசிக் பிபிஓ கிளையில் பணிபுரிந்த பெண் ஊழியர்கள் அளித்த புகார்களைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிதா கான், பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்தவர்களுக்கு உடந்தையாக இருந்ததாகவும், மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
புகார்கள்
நிதா கான் மீதான கடுமையான புகார்கள்
நிதா கான் குறிப்பாக, புகாரளித்த பெண்களை இஸ்லாம் மதத்தைத் தழுவுமாறு வற்புறுத்தியதுடன், ஹிஜாப் மற்றும் புர்கா அணியத் தூண்டியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்கள் மேலதிகாரிகளுக்கு எதிராகப் புகார் அளிக்காமல் இருக்க அவர்களை மூளைச்சலவை செய்ததாகவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். முன்னதாக, நிதா கான் தரப்பில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தனக்கும் மதமாற்றப் புகாருக்கும் தொடர்பில்லை என்றும் அவர் வாதிட்டார். இருப்பினும், இந்த வழக்கில் டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் வலுவாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அரசுத் தரப்பு, அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என வாதிட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை நிராகரித்தது.
வெளிநாட்டு தொடர்பு
மலேசியா மற்றும் மாலேகான் தொடர்பு
சிறப்பு விசாரணைக்குழு (SIT) நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்த மதமாற்ற விவகாரத்தில் மாலேகான் மற்றும் மலேசியா போன்ற இடங்களுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அங்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்களைத் தூண்டியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே டேனிஷ் ஷேக், தௌசிப் அத்தார் உள்ளிட்ட ஒன்பதுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள டிசிஎஸ் நிறுவனம், தங்களது POSH வழியாக இதுவரை எந்த முறையான புகார்களும் வரவில்லை என்று தெரிவித்துள்ளது. இருப்பினும், குற்றச்சாட்டுகளின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, தன்னிச்சையான நிபுணர்களைக் கொண்டு ஒரு விசாரணைக் குழுவை அமைத்துள்ளதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது. நிதா கானின் கைதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.