
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தின் வட மற்றும் தென் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இந்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், கடலூர் மாவட்டம் லால்பேட்டை மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் அதிகபட்சமாக 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு, சீர்காழியில் தலா 5 செ.மீ., மற்றும் கடலூர் மாவட்டம் கே.எம்.கோயில், நீலகிரி மாவட்டம் செருமுள்ளி, மயிலாடுதுறை தானியங்கி வானிலை நிலையம் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
எச்சரிக்கை
வங்கக்கடல் நிலவரம் மற்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை
வங்கக்கடலில் அந்தமான் மற்றும் மியான்மரை ஒட்டிய பகுதிகளில் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதனால் தமிழகத்துக்கு நேரடி பாதிப்பு எதுவும் இருக்காது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால், தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடலை ஒட்டிய பகுதிகளில் இன்று மற்றும் நாளை மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.