தள்ளுவண்டிக் கடைகளுக்கும் FSSAI உரிமம் கட்டாயம்; தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் பொது இடங்களில் தள்ளுவண்டியில் வைத்துச் சுடச்சுட உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து வகை நடமாடும் கடைகளுக்கும் FSSAI (இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்) சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை சனிக்கிழமை (நவம்பர் 15) அறிவித்துள்ளது. பானிபூரி, வடை, சூப், சிக்கன் பக்கோடா போன்ற சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் தள்ளுவண்டிக் கடை உரிமையாளர்கள் அனைவரும் முறையான உரிமத்தைப் பெற வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. இது மக்களின் ஆரோக்கியம் மற்றும் உணவுத் தரத்தைப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்கான முக்கிய நடவடிக்கையாகும்.
நடவடிக்கை
உரிமம் இல்லாத கடைகள் மீது நடவடிக்கை
FSSAI உரிமம் இல்லாத கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த உரிமத்தைப் பெறுவதற்கான செயல்முறை எளிதாக்கப்பட்டு, தள்ளுவண்டிக் கடை விற்பனையாளர்கள் ஆன்லைன் மற்றும் இ-சேவை மையங்கள் மூலம் இலவசமாகவே உரிமத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிமம் பெறுவதற்கான வழிமுறைகளை அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும், தள்ளுவண்டிக் கடை விற்பனையாளர்கள் உரிமம் பெற்றுள்ளார்களா என்பதைக் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.